ப.சிதம்பரம் தாக்கல் செய்த அண்மைய பட்ஜெட் பற்றி பொதுவான கருத்து - கிராமப்புற வளர்ச்சிக்கும், அதன் அடிப்படைத் தேவைகளுக்கும் அக்கறை காட்டப்பட்டுள்ளது என்பதே! கம்யூனிஸ்ட்டுகளுடனான கூட்டணியில் உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச பொதுத்திட்டத்திற்கு முடிந்தவரை இந்த பட்ஜெட்டில் நியாயம் செய்யப்பட்டுள்ளது என்றால் கூட, அநியாயம். சற்று கூடுதலாகவே இறங்கி வந்திருக்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அதைத் தாண்டி, இன்னொரு விஷயமும் இந்த பட்ஜெட்டில் தொக்கிக் கிடக்கிறதோ என்று எனக்கு தோன்றுகிறது; உறுதியாக நம்புகிறேன். அது - பங்குசந்தைக்குள் அதிக பணம் பாய, ப.சிதம்பரம் கொஞ்சம் முன்ஜாக்கிரதையாகவே மடை மாற்றுகிறார் என்பதுதான். என் சந்தேகத்துக்கு அடிப்படைகள் இல்லாமல் இல்லை.
சிதம்பரம் மடை மாற்றுகிறார் என்பதை நான் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. மாறாக ஒரு நிதியமைச்சர்..., அதிலும் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறையிலிருக்கும் ஒரு நாட்டின் நிதியமைச்சர் கட்டாயம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய திசையில்தான் அவரது நடவடிக்கை இருப்பதாகவே நினைக்கிறேன். முதலில் எந்தவகையில் பணம் இனி பங்குசந்தைக்குள் அதிகமாக பாயும் என்று நான் நம்புவதைச் சொல்லிவிட்டு மற்ற விஷயத்துக்கு வருகிறேன்.
தனிநபர் வருமான வரி முகப்பை, ஒரு லட்சம் என்று உயர்த்தியிருக்கும் சிதம்பரம் - கூடவே இன்னும் ஒரு சலுகையும் தந்துள்ளார். அது, அடுத்து 1 லட்ச ரூபாய்வரை சேமித்து, முதலீடு செய்பவர்களுக்கு - அந்தத் 'தொகை'க்கும் வருமான வரி இல்லை என்பது. சேமிப்புக்கான இந்த சலுகை, முற்றிலும் புதிதானதல்ல. கடந்த ஆண்டுகளிலெல்லாம் கூட, சேமிக்கப்படும் தொகைகளில் - இன்ஸ்யூரன்ஸ் என்றால்... 'இவ்வளவு!'. அதில் பென்ஷன் பாலிசி என்றால்... 'இப்படி!'. சிறுசேமிப்பு பத்திரமா?... 'இந்தா, பிடிச்சிக்கோ!'. வரி சேமிக்கும் பாண்ட்களில் பணம் போட்டால் - 'இந்த மட்டும்', என ஒவ்வொன்றுக்கும் ஒரு வரம்பு இருக்கும். சலுகை தரப்பட்டது.
இப்போது அந்த மாதிரியான வரம்புகள் எதுவும் கிடையாது என்று சொல்லிவிட்டார் சிதம்பரம். யாருக்கு எந்த வகையில் தேவையோ, ஆர்வமோ, தெரியுமோ அந்த வகையில் இஷ்டம்போல முதலிட்டுக் கொள்ளலாம். கதவு திறக்கப்பட்டுவிட்டது.
இதனால் ஏற்படும் நிகர விளைவாக என்ன இருக்கும் என்றால் - வரி சேமிப்பு கட்டாயத்துக்காக குறைந்த வட்டியும், வருவாயும் தரும் பாண்ட் போன்றவற்றில் இனி யாரும் முதலிட மாட்டார்கள். அல்லது யோசிப்பார்கள். மாநில அளவில் சிறுசேமிப்பு திட்டங்களில் போடப்படும் பணத்தின் அளவும் கணிசமாகக் குறையும். இப்படி பல்வேறு வகைகளில் சென்று கொண்டிருந்த குறைந்த வருவாய் பெற்ற பணமெல்லாம் இனி 1. வருங்கால வைப்பு நிதி (Provident Fund) அல்லது 2. பரஸ்பர நிதித்திட்டம் எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் 3. இன்ஸ்யூரன்ஸ் திட்டங்கள் என்ற வகையில் மட்டுமே அதிகமாக திரும்பக்கூடும். இதில்கூட, எண் 1ம், 3ம் எதிர்கால மற்றும் குடும்ப பாதுகாப்பு கருதிதான். மற்றபடி, பெரும்பாலோர் அதிக லாபம் ஈட்ட எண்ணி 2வது வகை திட்டங்களை நாடுவது அதிகரிக்கப் போகிறது. இன்னும் அதிகமாக பணம் சேர்ந்துவிட்டால், அப்புறம் ரியல் எஸ்டேட் போல திசை மாறக்கூடும். மற்றபடி ஓராண்டில் அனுமதிக்கப்படும் சேமிப்பான ஒரு லட்சத்தில் அலுவலகத்திலேயே கட்டாயப் பிடிப்பான தொகைகள், வீட்டுக்கடன் போன்ற இதர இனங்கள் எல்லாம் போக, மீதி கிடைப்பதில் பொதுவாக பெருந்தொகைகளை எதிர்பார்க்க முடியாது. அது போன்ற தொகைகள் சேமிக்கப்படும்போது கிடைக்கும் தொகைக்கு இந்த வழிகள்தான் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சரி! ஆனால், அந்த அளவுக்கு நம் மக்களிடம் விழப்புணர்ச்சி இருக்கிறதா என்று கேள்வி எழுந்தால் சரிதான்.
மேலே விவாதிக்கப்படும் தரப்பினரெல்லாம் மாத ஊதியம் பெற்று, முறையாக வருமான வரி செலுத்தும் ஆட்கள் என எடுத்துக் கொண்டு இந்த கணிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இத்தரப்பினரிடையே ஏற்கெனவே மியூச்சுவல் பண்ட் போன்ற சேமிப்பு பழக்கங்கள் தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரையான அனுமதிப்படி, இத்துறையில் 10 ஆயிரம் வரை முதலிட்டு அதிகபட்சமாக 2000வரைதான் சலுகை பெறலாம் என்பதால், அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தவர்களும், குறைவாக முதலிட்டவர்களும் கூட இனி தங்கள் பார்வையை திசை திருப்புவார்கள். இவர்கள் பாதுகாப்பு கருதி நேரடியாக பங்குசந்தைக்குள் போகாவிட்டாலும் மியூச்சல் பண்ட்கள் வழிகளையும் தவிர்க்க வாய்ப்புகள் குறைவே! அத்துடன் தற்போது தனியார்த்துறை இன்ஸ்யூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்ட்கள் என ஏகத்துக்கும் வந்துவிட்டபின், இவர்கள் - விளம்பரங்கள் மூலமே எல்லாருக்கும் தகவல் தந்து அவர்களிடம் பணம் புரட்டும் வேகத்தை அதிகரிப்பார்கள். இந்தப் பணம் எல்லாம் அடுத்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்குசந்தைக்குள்தான் பாயும். கவனத்தில் கொள்க - வரி செலுத்தும் ஒவ்வொருவரும் அதிக பட்சமாக 1 லட்சம்வரை கூட இங்கே முதலிடலாம். அப்படியானால் மொத்தத் தொகை எவ்வளவு திரள வாய்ப்பிருக்கிறது? கணக்கு போடுங்கள்.
அடுத்தும், தற்போது புதிய அணுகுமுறையாக, வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிராவிடண்ட் ஃபண்ட் தொகுப்பையும் பங்கு சந்தையில் முதலிட அனுமதிக்கும் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அதே போல, ஓய்வூதியத் துறையில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதித்து, தனியார்த்துறை இவ்வகையில் செயல்படும் வேகத்தையும், விவரத்தையும் மேம்படுத்தத் திட்டமிடப்படுகிறது. எனவே இந்த எல்லா பணமும் கடைசியில் 'ஜிஜிபாய் டவர்-ஐ தவிர, வேறு எந்த திசை நோக்கி போகமுடியும்! போட்டி பெருகுவதால் எல்லாருக்கும் அதிக லாபம் ஈட்டித்தர வேண்டிய கட்டாயங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன.
'சிதம்பரத்தின் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம்' என நான் நினைக்கும் கருத்துக்கு ஆதாரமாக நிறுத்த இவை மட்டுமேயல்ல; இன்னும் சில விஷயங்களையும் சொல்ல நான் விரும்புகிறேன்.
இந்த பட்ஜெட்டில்தான் முதன்முறையாக அவர் அறிமுகப்படுத்தும் இன்னொரு அம்சம் - தங்கப் பங்குகள் (Gold Units). இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் தெரிந்த பொதுவான முதலீடு - தங்கம் வாங்குவதுதான். அதை குறைந்த பட்சமாக ரூ.100 விலையிலும்கூட, (பரஸ்பர நிதி திட்ட பங்குகள் போல) எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம் என்ற இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் - அது மௌள மௌள மற்ற வகை பங்குகள் பற்றிய எளிய அறிமுகத்தைக் கொடுக்கும். அதனால், அடுத்தடுத்த கட்டமாக மெல்ல பரஸ்பர நிதி என்று பயணம் செய்து, அடுத்து நேரடி பங்கு முதலீட்டு எல்லையை எட்ட வழிவகுக்கும் சாத்தியங்கள் உள்ளன. அந்தவகையில் தங்கபங்குகள் - ஒரு 'ஆரம்ப பாடசாலை'யாக கட்டாயமாக இருக்கும் என நினைக்கிறேன். ரிசர்வ் வங்கிக்கும், செபிக்கும் இந்த பட்ஜெட்டில், இதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அடுத்து, சிதம்பரம் இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ள மற்றொரு பங்கு சந்தை ஊக்க மாத்திரை -பங்கு வர்த்தகத்தின் ஒருவகை நீட்சியான டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் இனி, ஊக வணிக வகையில் சேராது என்று சொல்லியிருப்பது. இதனால் ஊக வணிகத்தால் உள்ள இடைஞ்சல் நீங்கி டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் அதிகரிக்கும்.
இந்த மாதிரி கன்னாபின்னாவென பணம் பாய்ந்தால், அதைக் கையாள்வதில் பங்குசந்தை இடை அமைப்புகளான தரகர் உள்ளிட்டவர்கள் தடுமாறிவிடக்கூடாது என, இதுகுறித்த முறையான 'பாடசாலை' ஒன்றை உருவாக்கவும் அறிவிப்பு வந்துவிட்டது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்ஸ்' என்ற அந்த அமைப்பை 'தேசிய மூலதன கல்வி நிறுவனம்' என்றா... அல்லது வேறு எப்படி தமிழில் சொல்லப் போகிறார்கள் தெரியவில்லை. அதில், இந்த துறை ஆராய்ச்சிக்கும் வழிகள் உருவாக உள்ளன.
இன்னொரு பக்கம், பங்கு சந்தையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு கொள்ளும் வர்த்தக வங்கிகள் தங்களது கையிருப்பு ரொக்கத்தை எப்படி கையாள்வதென, இதுவரை இருந்த அரசு சட்டத் திட்டங்கள் திருத்தப்பட்டு, 'இனி, அதெல்லாம் ரிசர்வ் வங்கியின் வரம்பும், பொறுப்பும்' என மாற்றப் போகிறார்கள். இதன்படி வங்கிகள் இனி அவர்களிடம் வைத்திருக்கும் குறைந்தபட்ச, அதிகபட்ச ரொக்க கையிருப்பு, ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து வைக்கும் முன்ஜாக்கிரதை பிணைப் பணம் என்பதையெல்லாம் இனி அரசு நேரடியாக தலையிட்டு கட்டுப்படுத்தாது. எனவே வலுவான வங்கிகள் கூடுதலாக பணத்தைத் தாங்களே கையாள அனுமதிக்கப்படும். நோஞ்சான்கள், ஏற்கெனவே போட்டியில் அடிபட்டு, வலுவான வங்கிகளுடன் இணைக்கப்படும் திட்டங்கள் உள்ளன. போட்டி நிறைந்த இன்றைய நாளில் கூடுதல் லாபம் காண பல வங்கிகளும் தங்களது கையிருப்பில் ஒரு பகுதியையாவது பங்கு சந்தைக்குத் திருப்பிவிடும். முந்தைய காலங்களில் போல எல்லாவற்றையும் தொழில்துறைக்கு கடனாகக் கொடுத்து Non performing Asset ஆக மாற்றி வைப்பது எந்த வங்கிக்கும் இனி சாத்தியமில்லை. அதனால் யாரெல்லாம் ஒழுங்காகத் திருப்பிக் கடனைச் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் கடன். மற்ற பணத்தை கையில் சும்மா வைத்திருக்க வாய்ப்பில்லை.
சரி, இவ்வளவு பணமும் இந்திய பங்கு சந்தைக்கு தேவையா என்றால் - நான் நினைப்பது தேவை மட்டுமல்ல; அவசியமும்கூட.
புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபின் தொழிற்துறையில் மட்டுமின்றி, பங்குசந்தையிலும் அந்நிய நிறுவனங்கள் முதலிட அனுமதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் நீர்ஊற்று போல மெதுவாகத் தொடங்கிய இந்த முதலீடுகள் இன்று உருண்டு, திரண்டு வௌளம் போல பாய்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் மொத்த பங்குசந்தை வர்க்கத்தில் கால் பகுதிக்கும் மேல் அந்நிய முதலீட்டாளர்களால் செய்யப்பட்டது என்கின்றன புள்ளிவிபரங்கள். இந்தியாவின் அனைத்து நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள், மற்ற நிறுவனங்கள், தனி முதலீட்டாளர்கள் என எல்லாரும் சேர்ந்தது மீதி பகுதி. எனவே இன்று நான்கில் ஒரு பங்குக்குமேல் வர்த்தக பங்கை கைக்குள் வைத்திருக்கும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஒரு எதிர்குஷனாக பங்குசந்தையில் உள்நாட்டு முதலீடு தேவைதான்.
1990களின் இறுதியில் தென்கிழக்காசிய நாடுகளில் நடந்த சம்பவங்கள் இங்கே நினைவு கூறத்தக்கவை. அந்நாட்களில் மேற்கண்ட நாடுகள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து, அவர்களது நாணய மதிப்பு உலக சந்தையில் கடும் வீழ்ச்சி கண்டு, பொருளாதாரம் படுத்துவிட்டது. அப்போது, அதற்கு காரணமாக கண்டறியப்பட்டது - அவர்களது அந்நிய முதலீட்டுக்கு ஈடாக உள்நாட்டில் சேமிப்பு இல்லாமல் போனது என்பதுதான். லாபம் கிடைக்கும்வரை இருந்த அந்த அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது 'வேலை' முடிந்தவுடன் ஒரே நேரத்தில் கடையை காலிசெய்ய... அதை சமாளிக்க அங்கே உள்நாட்டு மூலதனம் இல்லாததால் எல்லாம் ஆடிப்போனது. அப்போது ஏற்பட்ட பொருளாதார ரத்த வௌளத்தை உலகமே பரிதாபமாக பார்த்தது. அந்த நிலை, இன்று நமக்கும் ஏற்படாமல் இருக்க - நம் உள்நாட்டு சேமிப்பு அதிகரிக்க வேண்டும். பொதுவாகவே இந்தியர்கள் மற்றவர்களை அதிக சேமிப்பு வழக்கம் கொண்டவர்கள்தான். சந்தேகமில்லை. ஆனாலும் இன்றைய சூழல் நமது சேமிப்பை இன்னும் அதிக அளவில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஐ.மு.கூ. அரசு பதவி ஏற்க இருந்த நாட்களில்... அடுத்த ஆட்சியின் நிச்சயமற்ற போக்கு நிலவியபோது... அதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஆட்சிதான் அடுத்து அமையும் என்ற தகவல்கள் கசிந்தபோது அந்நிய முதலீட்டாளர்கள் ஒருமுறை பின்வாங்கினர். அப்போது, இதுவரையான சரித்திரத்திலேயே இல்லாத அளவு ஒரே நாளில் 800 புள்ளிகள் வரை அதள பாதாளத்தில் பாய்ந்த பங்குசந்தை குறியீட்டெண், பின்னர் சமாளித்து 500+ புள்ளிகளில் அன்றைய தினத்தை முடித்தது. அன்றைய தினம் LIC போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பணம் பங்குசந்தைக்குள் கணிசமாகப் பாய்ந்ததால்தான் சிக்கல் அந்த அளவோடு அடங்கியது. இல்லாவிட்டால் இன்னும் மோசமாகியிருக்கும். எனவே இது போன்று எதிர்பாராத சம்பவங்களை சமாளிக்கவும் நாடு தயாராக இருக்க வேண்டியுள்ளது. எனவே கணிசமான பங்குசந்தை சார்ந்த முதலீடு இந்தியாவுக்கு தேவைதான். அதற்காகத்தான் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக்கூட, ப.சிதம்பரம் பங்கு சந்தையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் முதலீட்டை ஊக்குவிக்கிறாரோ என்றும், மறுபுறம் இதைக் கொண்டு இந்திய தொழில்களையும், உள்கட்டமைப்பையும் வலுப்படுத்த எண்ணுகிறாரோ என்றும் நான் நினைக்கிறேன்.
வியாழன், மார்ச் 17, 2005
கண் சிமிட்ட வைத்த கவிதைகள், இன்னும் சில!
கவிதை ரசிகர்கள் நிறையத்தான் இருக்கிறார்கள் இங்கே! ஆனால் தீவிர, நவீன கவிதை ரசிகர்களும் இருப்பார்கள் நிறையவே என்னும் தோன்றுகிறது. பிரமிள் பற்றியும், இன்னும் அவரையொத்த மூத்த கவிஞர்களின் கவிதைகளும் எல்லாருக்கும் ரசிக்க சிரமம் என்பதால்..... நான் ரசித்த என்பதைவிட, என்னை கண் சிமிட்ட வைத்த கவிதைகள் என்று இங்கே சிலவற்றைத் தருகிறேன். இந்த பட்டியலில் நமது Blogக்கர்கள் குழுவின் உறுப்பினரான பாலு மணிமாறனின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இவையெல்லாம் அம்பலம் இணைய இதழில் நான் கவிதைத் தேர்வுக்கு பொறுப்பில் இருந்த காலத்தில் பிரசுரமானவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துத் தருகிறேன். இனி கவிதைக்குச் செல்வோம்.
அணில்
வேலி மேல் ஓடிக்கொண்டிருந்த
ஓர் அணில் திடீரென்று நின்றது
களைப்பாறவாக இருக்கலாம்
அடர்ந்த வாலில் இளமைத் துடிப்பு
மூன்று பட்டையில் இறைவனின் நாமம்
பிச்சிப்பூ மொட்டுப் பற்களில்
கவ்விய வாதாங்கொட்டை
இது எனக்குத் தெரியாத அணில்
புதிதாக வந்திருக்கிறது போல
இதுவரை வரும் அணில்கள் எல்லாம்
கோழிக்குப் போட்ட இரை தானியத்தைத்
திருடித் தின்றுவிட்டு ஓடும்
புது அணிலும் கோழி இரையைத் தின்றது
இதுவும் திருட்டு அணில்தான் என்று
பெருமூச்சு விடும் என்னை முறைத்தது
வாதாங்கொட்டையை விலையாய்
விட்டுச் சென்றது
பண்டமாற்று முறை புரிந்த புது அணில்.
- காஞ்சனா தாமோதரன்
நதியிடம் அதன் பால்யம் பற்றிக்
கேட்டேன்
ஒரு நாள் அடர்ந்த மரங்களின் ஊடே
மலையினடியில்
கிடந்த சிறிய ஓடைதான் நான்
அப்போது
இலைகள் தன் வாசனை கலந்து நீர்
உதிர்க்க
உதிர்க்க
ஊர்களைக் கடந்து பெரிய
நதியாகிவிட்டேன்
ஆனால் இன்னும் வனத்தில் ஞாபகமாய்
அலைகிறேன் என்றது
வண்ணத்துப்பூச்சி தன் பால்யத்தைப்
பற்றி
வருத்தமாய் சொன்னது
அப்போது நிறங்கள் பூசிய சிறகுகளற்று
பாதுகாப்பற்ற வீட்டில்
இருப்பது போல்
எப்போதும் எதிர்காலம் குறித்த
பயத்தோடு காற்றில் ஊஞ்சலாடும்
இலையில்
அசூயையூட்டும் புழுவாய் கிடந்தேன்
நல்ல வேளை
அப்போது என்னைப் பார்த்த
உறவினர்கள்
தற்சமயம் இல்லை
ஒரே வேடிக்கையாய் இருந்திருக்கும்
என்றது
தன் பால்யம் பற்றி புறநகர் பகுதி
மரமொன்று சொன்னது
இப்போது போல் அன்றைக்கு வீடுகள்
எல்லாம் நெருக்கமாய் வரவேயில்லை
எப்போதும் ஆடுகள்
குறித்த துர்சொப்பனங்களே
இரவெங்கும்.
- சங்கர ராம சுப்ரமணியம்
கிடைக்குமா!
ஆதாம் ஏவாளுக்கு அப்புறம் வந்து
ஏதோ நினைத்து எதற்கோ
கிறுக்கிய
ஆதிகால மனிதர்களின்
பழங்கால பாறை ஓவியங்களை
ஆராய்ச்சி செய்யும் மாமா...!
என் எழுத்தை எதிர்காலத்தில்
எவரேனும் ஆராய வேண்டுமென
ஆசையுண்டு எனக்கும்.
முழுக்கத் தேடிவிட்டேன்...
சிங்கப்பூர் தீவில் சிக்கவேயில்லை
பாழாய்ப்போன பழைய பாறை!
- பாலு மணிமாறன்
இங்கு இப்படியாக இலக்கியம்
ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்
கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன்
லா.ச.ரா.
இன்னும் எவர் எவரோ
நூலக அடுக்குகளில் வரிசையாய்
எத்தனையோ நாளாய் என்னோடு
பேச...
மன்னிக்கவும்.
ஒன்பது மணிக்கு நூலக அடைப்பு.
ஒரு மணி நேர இன்டர்நெட்டில்
பிரான்ஸ் தேசத்துப் பெண்ணோடு
பில் கிளிண்டன் பற்றிப் பேச
இன்னும் இருப்பதோ இருபதே நிமிடம்!
எங்கே போய்விடும் இலக்கியம்?
பேசலாமே பின்னொரு நாள்!
- பாலு மணிமாறன்
சிங்கையில் கூடி மகிழும் நண்பர்களுடன் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் கொரிக்கவாவது எதையாவது அனுப்ப முடியுமா என்ற ஏக்கம் இருந்தது.
யப்பா!........... இப்போது என் ஏக்கம் எல்லாம் தீர்ந்தது - மற்றவர்களுக்கும் சேர்த்து, எதோ பழங்கஞ்சியாவது குடிக்க கொடுத்ததில்!
அணில்
வேலி மேல் ஓடிக்கொண்டிருந்த
ஓர் அணில் திடீரென்று நின்றது
களைப்பாறவாக இருக்கலாம்
அடர்ந்த வாலில் இளமைத் துடிப்பு
மூன்று பட்டையில் இறைவனின் நாமம்
பிச்சிப்பூ மொட்டுப் பற்களில்
கவ்விய வாதாங்கொட்டை
இது எனக்குத் தெரியாத அணில்
புதிதாக வந்திருக்கிறது போல
இதுவரை வரும் அணில்கள் எல்லாம்
கோழிக்குப் போட்ட இரை தானியத்தைத்
திருடித் தின்றுவிட்டு ஓடும்
புது அணிலும் கோழி இரையைத் தின்றது
இதுவும் திருட்டு அணில்தான் என்று
பெருமூச்சு விடும் என்னை முறைத்தது
வாதாங்கொட்டையை விலையாய்
விட்டுச் சென்றது
பண்டமாற்று முறை புரிந்த புது அணில்.
- காஞ்சனா தாமோதரன்
நதியிடம் அதன் பால்யம் பற்றிக்
கேட்டேன்
ஒரு நாள் அடர்ந்த மரங்களின் ஊடே
மலையினடியில்
கிடந்த சிறிய ஓடைதான் நான்
அப்போது
இலைகள் தன் வாசனை கலந்து நீர்
உதிர்க்க
உதிர்க்க
ஊர்களைக் கடந்து பெரிய
நதியாகிவிட்டேன்
ஆனால் இன்னும் வனத்தில் ஞாபகமாய்
அலைகிறேன் என்றது
வண்ணத்துப்பூச்சி தன் பால்யத்தைப்
பற்றி
வருத்தமாய் சொன்னது
அப்போது நிறங்கள் பூசிய சிறகுகளற்று
பாதுகாப்பற்ற வீட்டில்
இருப்பது போல்
எப்போதும் எதிர்காலம் குறித்த
பயத்தோடு காற்றில் ஊஞ்சலாடும்
இலையில்
அசூயையூட்டும் புழுவாய் கிடந்தேன்
நல்ல வேளை
அப்போது என்னைப் பார்த்த
உறவினர்கள்
தற்சமயம் இல்லை
ஒரே வேடிக்கையாய் இருந்திருக்கும்
என்றது
தன் பால்யம் பற்றி புறநகர் பகுதி
மரமொன்று சொன்னது
இப்போது போல் அன்றைக்கு வீடுகள்
எல்லாம் நெருக்கமாய் வரவேயில்லை
எப்போதும் ஆடுகள்
குறித்த துர்சொப்பனங்களே
இரவெங்கும்.
- சங்கர ராம சுப்ரமணியம்
கிடைக்குமா!
ஆதாம் ஏவாளுக்கு அப்புறம் வந்து
ஏதோ நினைத்து எதற்கோ
கிறுக்கிய
ஆதிகால மனிதர்களின்
பழங்கால பாறை ஓவியங்களை
ஆராய்ச்சி செய்யும் மாமா...!
என் எழுத்தை எதிர்காலத்தில்
எவரேனும் ஆராய வேண்டுமென
ஆசையுண்டு எனக்கும்.
முழுக்கத் தேடிவிட்டேன்...
சிங்கப்பூர் தீவில் சிக்கவேயில்லை
பாழாய்ப்போன பழைய பாறை!
- பாலு மணிமாறன்
இங்கு இப்படியாக இலக்கியம்
ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்
கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன்
லா.ச.ரா.
இன்னும் எவர் எவரோ
நூலக அடுக்குகளில் வரிசையாய்
எத்தனையோ நாளாய் என்னோடு
பேச...
மன்னிக்கவும்.
ஒன்பது மணிக்கு நூலக அடைப்பு.
ஒரு மணி நேர இன்டர்நெட்டில்
பிரான்ஸ் தேசத்துப் பெண்ணோடு
பில் கிளிண்டன் பற்றிப் பேச
இன்னும் இருப்பதோ இருபதே நிமிடம்!
எங்கே போய்விடும் இலக்கியம்?
பேசலாமே பின்னொரு நாள்!
- பாலு மணிமாறன்
சிங்கையில் கூடி மகிழும் நண்பர்களுடன் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் கொரிக்கவாவது எதையாவது அனுப்ப முடியுமா என்ற ஏக்கம் இருந்தது.
யப்பா!........... இப்போது என் ஏக்கம் எல்லாம் தீர்ந்தது - மற்றவர்களுக்கும் சேர்த்து, எதோ பழங்கஞ்சியாவது குடிக்க கொடுத்ததில்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)