எனக்கு இதெல்லாம் தமாஷாகப்படுகிறது. 1996லிருந்து மாறிமாறி 'பால் கொடுத்து படுக்கைக்கு அனுப்பி வைக்கப்படும்', பெண்களுக்கான இந்த இடஒதுக்கீடு, இப்போது அவசர அவசரமாக சீவி முடிச்சி சிங்காரிக்கப்படுகிறதோ என்று நினைக்கிறேன். பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33% சதவிகித இடங்களை ஒதுக்க நடக்கும் புது கூத்தைத்தான் சொல்கிறேன்.
பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை 33% கூட்டி, அதை அப்படியே பெண்களுக்கு ஒதுக்கி விடலாம் என்ற... சோனியா காந்தியால் முன் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தத் திட்டத்தைப் பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு முன்வடிவைத் தயாரித்து மற்ற அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களது கருத்துக்கள் திரட்டப்பட்டு, பின்னர் முடிவு எடுக்கப்படுமாம். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இது குறித்து மற்ற கட்சித் தலைவர்களை... தேவைப்பட்டால் நேரில் சந்தித்துப் பேசுவார் என்கின்றன தலைநகரச் செய்திகள்.
முக்கிய தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக இரண்டும்... இந்த புதிய ஆலோசனைக்கு முன்பே கூட, பெண்களுக்கு இட ஒதுக்கீடு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் கருத்து முரண் கொண்டிருக்கவில்லை. குறைந்தபட்சம் - வௌதப்படையாகவாவது. அதனால் அவர்களது கட்சி எம்.பி.ககள் ஒட்டு மட்டுமே இதை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற போதுமானது. அதன் பிறகும் இந்த விஷயத்தில் சிக்கல் நீடிக்க காரணம் - முலாயம் சிங் போன்ற சிலர் பெண்களுக்கான இந்த 33% சதவிகிதத்திற்குள் ஜாதி அடிப்படையிலான உள்ஒதுக்கீடும் தேவை என்று கொடிபிடிப்பதுதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி கட்சிகளின் ஆதரவும் இல்லாவிட்டால் மாநில சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட இயலாது என்பது ஒரு சிக்கல்தான். அதனால், முலாயம் போன்றவர்களின் கோரிக்கையை ஏற்க இயலாமலோ..., விருப்பமில்லாமலோ காரியம் தள்ளிபோடப்பட்டு வருகிறது. முலாயம் போன்றவர்களுக்கு, இது தள்ளிப் போவதில் பெரிதான இழப்பும் இல்லை. விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறையும் இல்லை.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின்படி, பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 540 சொச்சம் உறுப்பினர்களோடு, இன்னுமொரு 170 சொச்சம் (33%) புதிய உறுப்பினர்கள் உருவாவார்கள். தமிழக சட்டமன்றத்தில் உள்ள 240 சொச்சம் உறுப்பினர்களோடு இன்னுமொரு 80 (33%) புதிய உறுப்பினர்கள் இடம் பிடிப்பார்கள். அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து, தற்போது எத்தனை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக சட்டம் இயற்றும் அரங்குகளுக்குச் செல்கிறார்களோ, அதனுடன் சேர்த்து இன்னும் கூடுதலாக மூன்றில் ஒருபங்கு கூட்டம் இதே பணியைச் செய்ய கூடிக் கொள்ளும். மற்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அத்தனை வசதிகளும், வாய்ப்புகளும், படிகளும், பதவிசுகளும் இன்னும் கூடுதலான நபர்களுக்கு வழங்கப்பட புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் இன்னுமொன்று நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது. கொஞ்ச காலத்துக்கு முன்புதான், மாநில மற்றும் மத்திய அரசுகளில் அமைச்சர்களாக பதவி விகிப்பவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கத்துக்கு எகிறி, அதனால் ஏற்பட்ட உபரி செலவுகள் பயமுறுத்தும் எல்லையை எட்டியபோது சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இத்தனை சதவிகிதம் பேர்தான் மந்திரியாகலாம் என்று வரையறை கொண்டு வரப்பட்டது. அதனால் சில மாநிலங்களில் பதவி இழந்தவர்கள் கூட உண்டு. அந்தந்த மாநில தலைநகர்களில் சிக்கலான பல நபர்களுக்கு பதவி அளிக்க இயலாத நிலை ஆளுங்கட்சிகளுக்கு ஏற்பட்டது. இதனால், தொடர்ந்து அத்தகையவர்களை சமாளிக்க எதாவது ஒரு பொறுப்பான பதவியை புதிதாகவாவது உருவாக்கிட வேண்டிய கட்டாயம் பல மாநில முதல்வர்களுக்கு இன்றும் கூட தொடர்வது வேறு விஷயம். இது போன்ற சிக்கல்கள் எல்லாவற்றும் ஒட்டுமொத்த ஒரேவீச்சு தீர்வாக இந்த புதிய வழியை கண்டுபிடித்துள்ளார்களோ என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் இந்த புதிய அணுகுமுறை மூலம் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்து அவர்களுக்கு ஜனநாயகத்தில் புதிய பொறுப்பை உண்டாக்கித் தந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி தனது தொப்பியில் இறகு குத்துக் கொள்வது மட்டுமின்றி, இனி மாநிலம் தோறும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் எண்ணிக்கை மட்டுமல்ல; மந்திரிகளின் எண்ணிக்கையும் சட்டப்படி அதிகரிக்கும். அப்படி செய்து கொள்ள அந்தந்த மாநில முதல்வர்களுக்கு, பிரதமருக்கு தார்மீக உரிமை கிடைத்துவிடும்.
இந்த புதிய ஆலோசனையை நியாயப்படுத்த உள்துறை அமைச்சகம் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்வைக்கப்படும் வாதம் வினோதமானது. 'தற்போது நடைமுறையில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை, 1952ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி முடிவு செய்யப்பட்டது. அன்றைய மக்கள்தொகையை ஒப்பிட்டால், இப்போது அது 3 மடங்காகியுள்ளது. எனவே, மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்களது பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்க வேண்டியுள்ளது. எனவே இந்தவகையில், அதை செய்து கொள்வதில் தவறு இல்லை' என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்தும், இதற்கான வாதம் பற்றியும் வேறு எந்த கட்சியும் இன்னும் பெரிதாக கருத்து சொல்லிவிடவில்லை. பாஜக மிகவும் கவனமாக இதை அணுகுவதாகத் தெரிகிறது. வரும் 23ந்தேதி கூடும் அக்கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து கருத்து சொல்வார்களாம். மற்ற கட்சிகள் இதைக்கூட இன்னும் சொல்லவில்லை. மவுனம் காக்கிறார்கள். எனக்கென்னவோ இந்த மவுனத்துக்கு அர்த்தம் இருப்பதாக தோன்றுகிறது.
காங்கிரஸ் கட்சியின் இந்த திட்டத்துக்கு - தேர்தல் அல்லாத நேரங்களில் பொதுமக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், மற்ற ஊடகங்கள் போன்றவை மௌனம் காத்தால்... 'இதனால் ஒன்றும் பிரச்னையில்லை. பெரிதான எதிர்ப்பு இருக்காது' என்று எண்ணி, இந்த திட்டத்தை பல கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக்கூடும். மாறாக, ஊடகங்கள் இதற்கு எதிராக ஓங்கிக்குரல் கொடுத்தால் - அதை உணர்ந்து மற்ற சில கட்சிகளும் இத்திட்டத்தை ஏற்க மறுக்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது. மற்றபடி இத்தனை நாட்களுக்குப் பிறகும் மற்ற பல கட்சிகளும் மௌனம் காப்பதை என்னால் வேறு மாதிரி புரிந்து கொள்ள முடியவில்லை.
குறிப்பாக - இத்திட்டம் குறித்து கம்யூனிஸ்ட் தோழர்கள் அமைதி காப்பது ஏன் என்று இன்னும் எனக்கு விளங்கவில்லை. நிதியமைச்சரின் பொறுப்பான பட்ஜெட் தயாரிப்பில் - அவர் எதெதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் இவர்கள் பரிந்துரைப்பார்களாம். கேட்டால், இவர்கள்தான் இந்திய மக்களின் காவல் நாய்களாம். இந்த நாய்கள் குரைப்பதை காங்கிரஸ் கட்சி பொருட்படுத்தாமல் போனால், கடிக்கவும் தயங்க மாட்டார்களாம். இவர்கள் கடித்தால், பாதிப்பு அதிகம் இருக்குமாம். இப்படியெல்லாம் விடப்பட்ட பல மிரட்டல்களைத் தாண்டித்தான் சிவில் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட சில துறைகளில் தாராளமயக் கொள்கைகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுள்ளன என்பதையும் இங்கே மறுப்பதற்கில்லை.
இதுபோக, தனியார் நிறுவனங்களுக்கும், கார்ப்போரேட் கம்பெனிகளுக்கும் தரப்படும் வரிச் சலுகைகளைக் குறைத்து, அதை சாமானிய பொது மக்கள் பயன் அடையும் வகையில் செலவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் இந்த காவல் நாய்கள், அரசின் செலவை அதிகரிக்கவும், வெட்டித்தனமாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் கூச்சலிட்டு கோஷம் போட்டு அதற்கு செலவாகும் மக்களின் வரி பணத்தை இன்னும் அதிகரிக்கவும் வழி செய்யும் ஒரு புதிய திட்டம் குறித்து கருத்து சொல்லாமல் தாமதிப்பது, அல்லது தவிர்ப்பது ஏன் என்று கேட்க தோன்றுகிறது. முலாயாம் சிங் உள்ளிட்ட 'உள் ஒதுக்கீடு' கேட்ட நபர்களும்கூட, 'புதிய திட்டத்தின்படியும் உள்ஒதுக்கீடு தேவையா? அல்லது 'அது' இல்லாத எதையும் ஏற்கத் தயாரில்லையா, அல்லது இப்போதைய திட்டத்தை ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது குறைந்தபட்சம் மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறாரா?'என்று இதுவரை வாய் திறந்ததாகத் தெரியவில்லை. இந்த மவுனத்துக்கெல்லாம் அர்த்தம்...!?
இதையொட்டி நான் கணிக்கும் காட்சிகள் இன்னும் சில நாட்களில்... அல்லது வாரங்களில் நிஜமானால் எனக்கு உள்ளார்ந்தபடி வருத்தம்தான் மிஞ்சும். நமது அரசியல்வாதிகளை சரியாக கணித்து வைத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. மாறாக எனது கணிப்பு பொய்த்து - வேறு திசையில் சம்பவங்கள் நடந்தால் அதில்தான் எனக்கு மகிழ்ச்சி; ஆனால் கூடவே அதிர்ச்சியும் இருக்கும்.
சட்டமியற்றும் பணிக்கு, மக்கள்தொகை கணக்குப்படி பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை நியாயப்படுத்தும் இந்த அரசியல்வாதிகள், இதுவரை இயற்றப்பட்டுள்ள சட்டங்களை அமலாக்கும் பணியில் உள்ள நிர்வாகிகள், பணியாளர்கள், அதிகாரிகள் எண்ணிக்கையையும் அதேபோல அதிகரிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்களா? அடுத்து, இயற்றிய சட்டத்தை காக்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக உள்ளவர்களின் எண்ணிக்கை மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்தார்களா? அவ்வாறு உணர்ந்திருந்தால், அதை செய்ய இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? அல்லது இனிதான் என்ன செய்யப் போகிறார்கள்?
ஏற்கெனவே பல அரசு அலுவலங்களில்... மத்திய, மாநில அரசுகளில் பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்கள், பதவி உயர்வில் செல்வபவர்கள், பதவி காலத்தில் காலமாகிவிடுபவர்கள் என உருவாகும் பல பணியிடங்களுக்கும் கூட புதிதாக ஆட்களை அமர்த்துவதை நிறுத்தி வைத்துள்ளனர். இருக்கும் பணியாளர்களே முடிந்த அளவு காரியத்தை செய்கிறார்கள். முடியாத காரியம் - யாருக்கு எத்தனை அவசரம் என்றாலும் தனக்கு 'விதிக்கப்பட்ட' வேகத்தில்தான் நகர்வேன் என்று சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறது. உதாரணமாக ஒரு சம்பவம் சொல்ல விரும்புகிறேன். (நேற்றைய தினம் - 21 Feb 2005, NDTV செய்தியில் பார்த்தது)
நாட்டின் ரயில்வே துறையில் தற்போது ரயில் என்ஜினை இயக்கும் டிரைவர்களுக்கு பற்றாக்குறை உள்ளதாம். சட்டப்படி, ஒரு டிரைவர் நாளொன்றுக்கு தொடர்ந்து 10 மணி நேரம்வரை வேலை செய்யத்தான் பணிக்கப்படலாமாம். ஆனால் இன்று நடப்பதோ வேறு. டிரைவர்கள் பற்றாக்குறையால் ஒவ்வொரு டிரைவரும் அதிகபட்ச வேலை நேரத்தைத் தாண்டி, பல மணி நேரம் பணியாற்ற வேண்டியுள்ளதாம். அதனால் ஏற்படும் அயர்ச்சி, சோர்வு போன்றவை பல நேரங்களில் விபத்துகளுக்கு காரணமாகிவிடுகிறது என்கிறார் ஒரு டிரைவர். நாட்டில் வடக்கு முதல் தெற்குவரை... கிழக்கு முதல் மேற்குவரை ஓடும் பல்லாயிரம் மக்களின் உயிரை முன் வைத்து விளங்கும் பிரச்னைகள் பலவே இப்படியிருக்கையில் - மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் பணியிடங்கள் இங்கெல்லாம் உருவாக்கப்படாமல் இருக்கையில் சட்டசபைகளிலும், பாராளுமன்றத்திலும் - மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் என்ன பலன் ஏற்பட்டுவிடும்? அடுத்து, தற்போது மக்கள் பிரதிநிதியாக உள்ளவர்களில் எத்தனை பேர் நடக்கும் விவாதங்களைப் புரிந்து கொண்டு, பங்கேற்று, அதை வடிவமைக்கப் பங்காற்றுகிறார்கள்? அத்தகைய பங்களிப்பு, புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்களில் வரும் எந்த உறுப்பினர் குறைவால் ஈடு செய்ய முடியாத இழப்பாகப் போகிறது என்று எனக்குப் புரியவில்லை.
இதையும்தாண்டி, பழைய தீர்மான நகலின்படி பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படாமல் போனதற்கு காரணமாகச் சொல்லப்படுவதற்கு விடை காண்பதுதான் ஆட்சியாளர்களின், அவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களின் கடமையும் பொறுப்புமேயன்றி, அப்பிரச்னையில் இருந்து திசைத் திருப்பி, அதை வேறு தளங்களுக்கு கொண்டு செல்வதல்ல. சோனியா முன் வைத்துள்ள திட்டம், முலாயம் போன்றவர்கள் கேட்ட உள்ஒதுக்கீடுக்கும் வகை செய்யவில்லை; 'அது தேவையில்லை. தற்போதைய வடிவிலேயே அதை ஏற்றுக் கொள்கிறோம். இது குறித்து உங்களது விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது' என்று அவர்களை இறங்கி வரச் செய்யவும் இல்லை. மாறாக - எந்த அரசியல் கட்சியும் தற்போது அனுபவித்து வரும் பதவி சுகங்களில் - பெண்களுக்கு பங்கு தர வேண்டாம். உங்களுக்கு இழப்பு இல்லாதவகையில் புதிதாக பெண்களுக்கு பதவியை உருவாக்கித் தந்து அதில் உங்களுக்கும்
உரிய பங்கு தருகிறோம் என்று அரசியல் கட்சிகளுக்குச் சொல்வதாகத்தான் உள்ளது.
எனவே, நாளை சோனியா முன் வைத்த திட்டம் ஒருவேளை ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிதாக பெண்கள் சட்டமியற்றும் அவைகளுக்கு அனுப்பப்பட்டால், அது பெண்களுக்கான இடஒதுக்கீடு அமலாக்கப்பபட்டதாகப் புரிந்து கொள்ளப்படக்கூடாது. மாறாக, மக்களை, குறிப்பாக பெண்களை ஏமாற்றும் அரசியல் சமூகம் தொடர்ந்து இன்னுமொருமுறை வெற்றி பெற்றதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.
பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை 33% கூட்டி, அதை அப்படியே பெண்களுக்கு ஒதுக்கி விடலாம் என்ற... சோனியா காந்தியால் முன் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தத் திட்டத்தைப் பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு முன்வடிவைத் தயாரித்து மற்ற அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களது கருத்துக்கள் திரட்டப்பட்டு, பின்னர் முடிவு எடுக்கப்படுமாம். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இது குறித்து மற்ற கட்சித் தலைவர்களை... தேவைப்பட்டால் நேரில் சந்தித்துப் பேசுவார் என்கின்றன தலைநகரச் செய்திகள்.
முக்கிய தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக இரண்டும்... இந்த புதிய ஆலோசனைக்கு முன்பே கூட, பெண்களுக்கு இட ஒதுக்கீடு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் கருத்து முரண் கொண்டிருக்கவில்லை. குறைந்தபட்சம் - வௌதப்படையாகவாவது. அதனால் அவர்களது கட்சி எம்.பி.ககள் ஒட்டு மட்டுமே இதை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற போதுமானது. அதன் பிறகும் இந்த விஷயத்தில் சிக்கல் நீடிக்க காரணம் - முலாயம் சிங் போன்ற சிலர் பெண்களுக்கான இந்த 33% சதவிகிதத்திற்குள் ஜாதி அடிப்படையிலான உள்ஒதுக்கீடும் தேவை என்று கொடிபிடிப்பதுதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி கட்சிகளின் ஆதரவும் இல்லாவிட்டால் மாநில சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட இயலாது என்பது ஒரு சிக்கல்தான். அதனால், முலாயம் போன்றவர்களின் கோரிக்கையை ஏற்க இயலாமலோ..., விருப்பமில்லாமலோ காரியம் தள்ளிபோடப்பட்டு வருகிறது. முலாயம் போன்றவர்களுக்கு, இது தள்ளிப் போவதில் பெரிதான இழப்பும் இல்லை. விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறையும் இல்லை.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின்படி, பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 540 சொச்சம் உறுப்பினர்களோடு, இன்னுமொரு 170 சொச்சம் (33%) புதிய உறுப்பினர்கள் உருவாவார்கள். தமிழக சட்டமன்றத்தில் உள்ள 240 சொச்சம் உறுப்பினர்களோடு இன்னுமொரு 80 (33%) புதிய உறுப்பினர்கள் இடம் பிடிப்பார்கள். அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து, தற்போது எத்தனை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக சட்டம் இயற்றும் அரங்குகளுக்குச் செல்கிறார்களோ, அதனுடன் சேர்த்து இன்னும் கூடுதலாக மூன்றில் ஒருபங்கு கூட்டம் இதே பணியைச் செய்ய கூடிக் கொள்ளும். மற்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அத்தனை வசதிகளும், வாய்ப்புகளும், படிகளும், பதவிசுகளும் இன்னும் கூடுதலான நபர்களுக்கு வழங்கப்பட புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் இன்னுமொன்று நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது. கொஞ்ச காலத்துக்கு முன்புதான், மாநில மற்றும் மத்திய அரசுகளில் அமைச்சர்களாக பதவி விகிப்பவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கத்துக்கு எகிறி, அதனால் ஏற்பட்ட உபரி செலவுகள் பயமுறுத்தும் எல்லையை எட்டியபோது சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இத்தனை சதவிகிதம் பேர்தான் மந்திரியாகலாம் என்று வரையறை கொண்டு வரப்பட்டது. அதனால் சில மாநிலங்களில் பதவி இழந்தவர்கள் கூட உண்டு. அந்தந்த மாநில தலைநகர்களில் சிக்கலான பல நபர்களுக்கு பதவி அளிக்க இயலாத நிலை ஆளுங்கட்சிகளுக்கு ஏற்பட்டது. இதனால், தொடர்ந்து அத்தகையவர்களை சமாளிக்க எதாவது ஒரு பொறுப்பான பதவியை புதிதாகவாவது உருவாக்கிட வேண்டிய கட்டாயம் பல மாநில முதல்வர்களுக்கு இன்றும் கூட தொடர்வது வேறு விஷயம். இது போன்ற சிக்கல்கள் எல்லாவற்றும் ஒட்டுமொத்த ஒரேவீச்சு தீர்வாக இந்த புதிய வழியை கண்டுபிடித்துள்ளார்களோ என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் இந்த புதிய அணுகுமுறை மூலம் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்து அவர்களுக்கு ஜனநாயகத்தில் புதிய பொறுப்பை உண்டாக்கித் தந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி தனது தொப்பியில் இறகு குத்துக் கொள்வது மட்டுமின்றி, இனி மாநிலம் தோறும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் எண்ணிக்கை மட்டுமல்ல; மந்திரிகளின் எண்ணிக்கையும் சட்டப்படி அதிகரிக்கும். அப்படி செய்து கொள்ள அந்தந்த மாநில முதல்வர்களுக்கு, பிரதமருக்கு தார்மீக உரிமை கிடைத்துவிடும்.
இந்த புதிய ஆலோசனையை நியாயப்படுத்த உள்துறை அமைச்சகம் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்வைக்கப்படும் வாதம் வினோதமானது. 'தற்போது நடைமுறையில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை, 1952ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி முடிவு செய்யப்பட்டது. அன்றைய மக்கள்தொகையை ஒப்பிட்டால், இப்போது அது 3 மடங்காகியுள்ளது. எனவே, மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்களது பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்க வேண்டியுள்ளது. எனவே இந்தவகையில், அதை செய்து கொள்வதில் தவறு இல்லை' என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்தும், இதற்கான வாதம் பற்றியும் வேறு எந்த கட்சியும் இன்னும் பெரிதாக கருத்து சொல்லிவிடவில்லை. பாஜக மிகவும் கவனமாக இதை அணுகுவதாகத் தெரிகிறது. வரும் 23ந்தேதி கூடும் அக்கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து கருத்து சொல்வார்களாம். மற்ற கட்சிகள் இதைக்கூட இன்னும் சொல்லவில்லை. மவுனம் காக்கிறார்கள். எனக்கென்னவோ இந்த மவுனத்துக்கு அர்த்தம் இருப்பதாக தோன்றுகிறது.
காங்கிரஸ் கட்சியின் இந்த திட்டத்துக்கு - தேர்தல் அல்லாத நேரங்களில் பொதுமக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், மற்ற ஊடகங்கள் போன்றவை மௌனம் காத்தால்... 'இதனால் ஒன்றும் பிரச்னையில்லை. பெரிதான எதிர்ப்பு இருக்காது' என்று எண்ணி, இந்த திட்டத்தை பல கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக்கூடும். மாறாக, ஊடகங்கள் இதற்கு எதிராக ஓங்கிக்குரல் கொடுத்தால் - அதை உணர்ந்து மற்ற சில கட்சிகளும் இத்திட்டத்தை ஏற்க மறுக்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது. மற்றபடி இத்தனை நாட்களுக்குப் பிறகும் மற்ற பல கட்சிகளும் மௌனம் காப்பதை என்னால் வேறு மாதிரி புரிந்து கொள்ள முடியவில்லை.
குறிப்பாக - இத்திட்டம் குறித்து கம்யூனிஸ்ட் தோழர்கள் அமைதி காப்பது ஏன் என்று இன்னும் எனக்கு விளங்கவில்லை. நிதியமைச்சரின் பொறுப்பான பட்ஜெட் தயாரிப்பில் - அவர் எதெதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் இவர்கள் பரிந்துரைப்பார்களாம். கேட்டால், இவர்கள்தான் இந்திய மக்களின் காவல் நாய்களாம். இந்த நாய்கள் குரைப்பதை காங்கிரஸ் கட்சி பொருட்படுத்தாமல் போனால், கடிக்கவும் தயங்க மாட்டார்களாம். இவர்கள் கடித்தால், பாதிப்பு அதிகம் இருக்குமாம். இப்படியெல்லாம் விடப்பட்ட பல மிரட்டல்களைத் தாண்டித்தான் சிவில் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட சில துறைகளில் தாராளமயக் கொள்கைகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுள்ளன என்பதையும் இங்கே மறுப்பதற்கில்லை.
இதுபோக, தனியார் நிறுவனங்களுக்கும், கார்ப்போரேட் கம்பெனிகளுக்கும் தரப்படும் வரிச் சலுகைகளைக் குறைத்து, அதை சாமானிய பொது மக்கள் பயன் அடையும் வகையில் செலவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் இந்த காவல் நாய்கள், அரசின் செலவை அதிகரிக்கவும், வெட்டித்தனமாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் கூச்சலிட்டு கோஷம் போட்டு அதற்கு செலவாகும் மக்களின் வரி பணத்தை இன்னும் அதிகரிக்கவும் வழி செய்யும் ஒரு புதிய திட்டம் குறித்து கருத்து சொல்லாமல் தாமதிப்பது, அல்லது தவிர்ப்பது ஏன் என்று கேட்க தோன்றுகிறது. முலாயாம் சிங் உள்ளிட்ட 'உள் ஒதுக்கீடு' கேட்ட நபர்களும்கூட, 'புதிய திட்டத்தின்படியும் உள்ஒதுக்கீடு தேவையா? அல்லது 'அது' இல்லாத எதையும் ஏற்கத் தயாரில்லையா, அல்லது இப்போதைய திட்டத்தை ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது குறைந்தபட்சம் மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறாரா?'என்று இதுவரை வாய் திறந்ததாகத் தெரியவில்லை. இந்த மவுனத்துக்கெல்லாம் அர்த்தம்...!?
இதையொட்டி நான் கணிக்கும் காட்சிகள் இன்னும் சில நாட்களில்... அல்லது வாரங்களில் நிஜமானால் எனக்கு உள்ளார்ந்தபடி வருத்தம்தான் மிஞ்சும். நமது அரசியல்வாதிகளை சரியாக கணித்து வைத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. மாறாக எனது கணிப்பு பொய்த்து - வேறு திசையில் சம்பவங்கள் நடந்தால் அதில்தான் எனக்கு மகிழ்ச்சி; ஆனால் கூடவே அதிர்ச்சியும் இருக்கும்.
சட்டமியற்றும் பணிக்கு, மக்கள்தொகை கணக்குப்படி பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை நியாயப்படுத்தும் இந்த அரசியல்வாதிகள், இதுவரை இயற்றப்பட்டுள்ள சட்டங்களை அமலாக்கும் பணியில் உள்ள நிர்வாகிகள், பணியாளர்கள், அதிகாரிகள் எண்ணிக்கையையும் அதேபோல அதிகரிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்களா? அடுத்து, இயற்றிய சட்டத்தை காக்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக உள்ளவர்களின் எண்ணிக்கை மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்தார்களா? அவ்வாறு உணர்ந்திருந்தால், அதை செய்ய இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? அல்லது இனிதான் என்ன செய்யப் போகிறார்கள்?
ஏற்கெனவே பல அரசு அலுவலங்களில்... மத்திய, மாநில அரசுகளில் பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்கள், பதவி உயர்வில் செல்வபவர்கள், பதவி காலத்தில் காலமாகிவிடுபவர்கள் என உருவாகும் பல பணியிடங்களுக்கும் கூட புதிதாக ஆட்களை அமர்த்துவதை நிறுத்தி வைத்துள்ளனர். இருக்கும் பணியாளர்களே முடிந்த அளவு காரியத்தை செய்கிறார்கள். முடியாத காரியம் - யாருக்கு எத்தனை அவசரம் என்றாலும் தனக்கு 'விதிக்கப்பட்ட' வேகத்தில்தான் நகர்வேன் என்று சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறது. உதாரணமாக ஒரு சம்பவம் சொல்ல விரும்புகிறேன். (நேற்றைய தினம் - 21 Feb 2005, NDTV செய்தியில் பார்த்தது)
நாட்டின் ரயில்வே துறையில் தற்போது ரயில் என்ஜினை இயக்கும் டிரைவர்களுக்கு பற்றாக்குறை உள்ளதாம். சட்டப்படி, ஒரு டிரைவர் நாளொன்றுக்கு தொடர்ந்து 10 மணி நேரம்வரை வேலை செய்யத்தான் பணிக்கப்படலாமாம். ஆனால் இன்று நடப்பதோ வேறு. டிரைவர்கள் பற்றாக்குறையால் ஒவ்வொரு டிரைவரும் அதிகபட்ச வேலை நேரத்தைத் தாண்டி, பல மணி நேரம் பணியாற்ற வேண்டியுள்ளதாம். அதனால் ஏற்படும் அயர்ச்சி, சோர்வு போன்றவை பல நேரங்களில் விபத்துகளுக்கு காரணமாகிவிடுகிறது என்கிறார் ஒரு டிரைவர். நாட்டில் வடக்கு முதல் தெற்குவரை... கிழக்கு முதல் மேற்குவரை ஓடும் பல்லாயிரம் மக்களின் உயிரை முன் வைத்து விளங்கும் பிரச்னைகள் பலவே இப்படியிருக்கையில் - மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் பணியிடங்கள் இங்கெல்லாம் உருவாக்கப்படாமல் இருக்கையில் சட்டசபைகளிலும், பாராளுமன்றத்திலும் - மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் என்ன பலன் ஏற்பட்டுவிடும்? அடுத்து, தற்போது மக்கள் பிரதிநிதியாக உள்ளவர்களில் எத்தனை பேர் நடக்கும் விவாதங்களைப் புரிந்து கொண்டு, பங்கேற்று, அதை வடிவமைக்கப் பங்காற்றுகிறார்கள்? அத்தகைய பங்களிப்பு, புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்களில் வரும் எந்த உறுப்பினர் குறைவால் ஈடு செய்ய முடியாத இழப்பாகப் போகிறது என்று எனக்குப் புரியவில்லை.
இதையும்தாண்டி, பழைய தீர்மான நகலின்படி பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படாமல் போனதற்கு காரணமாகச் சொல்லப்படுவதற்கு விடை காண்பதுதான் ஆட்சியாளர்களின், அவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களின் கடமையும் பொறுப்புமேயன்றி, அப்பிரச்னையில் இருந்து திசைத் திருப்பி, அதை வேறு தளங்களுக்கு கொண்டு செல்வதல்ல. சோனியா முன் வைத்துள்ள திட்டம், முலாயம் போன்றவர்கள் கேட்ட உள்ஒதுக்கீடுக்கும் வகை செய்யவில்லை; 'அது தேவையில்லை. தற்போதைய வடிவிலேயே அதை ஏற்றுக் கொள்கிறோம். இது குறித்து உங்களது விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது' என்று அவர்களை இறங்கி வரச் செய்யவும் இல்லை. மாறாக - எந்த அரசியல் கட்சியும் தற்போது அனுபவித்து வரும் பதவி சுகங்களில் - பெண்களுக்கு பங்கு தர வேண்டாம். உங்களுக்கு இழப்பு இல்லாதவகையில் புதிதாக பெண்களுக்கு பதவியை உருவாக்கித் தந்து அதில் உங்களுக்கும்
உரிய பங்கு தருகிறோம் என்று அரசியல் கட்சிகளுக்குச் சொல்வதாகத்தான் உள்ளது.
எனவே, நாளை சோனியா முன் வைத்த திட்டம் ஒருவேளை ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிதாக பெண்கள் சட்டமியற்றும் அவைகளுக்கு அனுப்பப்பட்டால், அது பெண்களுக்கான இடஒதுக்கீடு அமலாக்கப்பபட்டதாகப் புரிந்து கொள்ளப்படக்கூடாது. மாறாக, மக்களை, குறிப்பாக பெண்களை ஏமாற்றும் அரசியல் சமூகம் தொடர்ந்து இன்னுமொருமுறை வெற்றி பெற்றதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.