முதலில், ஒரு முன்னுரை - இதற்கு தேவைப்படுவதாக நினைக்கிறேன். தோழியர் வலைபதிவில் 'உஷா' கடந்த வாரம் எழுதியிருந்த 'கிளி' என்ற கவிதையை எத்தனை பேர் படித்தீர்கள் எனத் தெரியவில்லை. நான் படித்தேன். அது குறித்து எனது பின்னோட்டத்தை, அப்போது தோன்றிய அளவில் எழுதிவிட்டேன். இன்று காலை வந்த பார்த்தபோது, உஷா அதற்கு பதில் அளித்திருந்தார். அந்த பதில்தான், இந்தக் கட்டுரைக்கு(!)க் காரணம். எனது விமர்சனம் - தவறான நோக்கிலோ, திட்டமிட்ட திசையிலோ இல்லை என்பதை உஷா சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. ஆனாலும், அவரது பதிலின் அடிநாதமாக எதோ ஒரு வருத்தம் அவரை ஆட்கொண்டிருக்க வேண்டும் என்றும் புரிந்தது.
எனது கருத்துகள் உஷாவை புண்பட, வருத்தப்பட வைத்திருந்தால், அதற்கு முதலில் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுவும், 'மகளீர் தின'த்தையொட்டி ஒரு பெண்மணி புண்பட காரணமாக இருக்க, நான் விரும்பவில்லை. அந்த எனது உறுத்தல்தான் இந்த பதிவுக்குக் காரணம்.
உஷாவின் கவிதை குறித்து எனது விமர்சனம் இதுதான்.
// கவிதையை 'காலி' பண்ணாமல் விடுவதில்லை என்ற முடிவோடு இருக்கிறீர்கள் போல! ;-) வாழ்த்துகள். ஆனால் ஒரு விஷயத்தை..., மனதில் பட்டதை உங்களுக்குச் சொல்லாமல் இருந்தால், அது நட்புக்கு நியாயமாகாது என்று நம்புகிறேன். அதனால் சொல்கிறேன். 'கிளி' கவிதையில் ஒரு கவிதை முயற்சி இருக்கிறது என்றுதான் சொல்வேன். இதன் மிகப் பெரிய குறை - வளவள தன்மை. முடிந்தவரை சுருக்கமாக... 'இதற்கு மேல் அதைச் சுருக்கவே முடியாது' என்ற அளவுக்குத்தான் கவிதையில் வார்த்தைகள் இருக்க வேண்டும். அடுத்து, நீங்கள் சொல்ல வரும் பல விஷயங்களை வாசகரே மனதில் உணர வைக்கும் அளவு கட்டமைப்பதுதான் நல்ல கவிதை என்பேன். அதை sub text என்பார்கள். நீங்கள் நேரடியாகச் சொல்லாத விஷயமும் கவிதைக்குள் மறைந்திருக்கும்படி கவிதை எழுத முன்னேற வேண்டும் என்ற விருப்பத்துடன் நண்பன், - சந்திரன் //
எனது விமர்சனத்தின் நோக்கம் - நல்ல கவிதைகளைப் படித்து, உணர்ந்து... அதைப் போல இன்னும் நிறைய உஷாவும் படைக்க வேண்டும் என்பதுதான். அதற்கு உதாரணமாக, நல்ல கவிதை என நான் நினைத்த ஒன்றை அவருடன் மட்டுமின்றி, எல்லாரோடும் பகிர்ந்து கொள்வோம் என்பதற்காகத்தான் இந்த பதிவு.
- - -
என்.டி.ராஜ்குமார் எழுதிய 'அம்மா' என்ற தலைப்பிட்ட கவிதை இது. அதில் மனதைத் தைத்த, மறக்க முடியாத வரிகளை மட்டும் முதலில் சொல்கிறேன்.
''ஓங்கிய கையை இறக்கிவிடு.
மூச்சு திணறுகிறது.
சூசகமாக ஒரு வார்த்தை சொல்!
சோற்றில் விஷம் வைத்து
என் அம்மாவைக் கொன்றுவிடுகிறேன்''
இவை கவிதையின் இறுதிவரிகள். இந்தக் கவிதையில் முந்தைய வரிகளில் கவிஞர் தன் மனைவி தனக்கு எப்படியெல்லாம் ஆதரவாக இருந்தார் என்பதையும், தாய் எப்படியெல்லாம் சீராட்டி வளர்த்தார் என்பதையும் பற்றி பேசுவார். சில வரிகள் கொஞ்சம், பொது மேடைக்கு உவப்பில்லாத வரிகளாகக் கூட வரும். ஆனால் கவிஞரின் சூழலையும், தாய், மனைவி... இருவரின் முக்கியத்துவத்தையும் விளக்கவே அந்த வரிகள். இப்படி மனைவி, தாய் இருவரும் அவசியம்தான் என்று உணரும் கவிஞர் அவர்கள் இருவருக்கும் எப்போதும் தொடரும் சண்டையில் யார் பக்கம் நிற்பது என்று புரியாமல் தள்ளாடுகிறார். அந்நிலையில் ஒருநாள் தாய்க்கும், மனைவிக்கும் சண்டை. மனைவி, தாயை அடிக்க கையை ஓங்குகிறார். அந்த நேரத்தில் மனைவியைப் பார்த்து பேசுவது போல இந்த வரிகள் வருகின்றன.
நான், SUB TEXT என்று சொன்னேனே அந்த வகையில்தான் கவிஞரின் மனப் போராட்டங்களும், வருத்தமும் அந்த கவிதையில் மறைந்திருக்கும். மேம்போக்காகப் பார்த்தால் 'என்ன இது, மனைவிக்காக - அம்மாவை விஷம் வைத்துக் கொள்வதாகச் சொல்கிறானே, இந்தப் பாவி!' என்று தோன்றும். கூடவே, மனைவியின் முக்கியத்துவமும் சொல்லப்பட்டிருப்பதால் 'பொண்டாட்டி தாசனோ!' என்று கூட சொல்லத் தோன்றலாம்.
ஆனால் நிஜத்தில், மனைவியிடம் அவன் கோருவது - 'உன்னை நான் பிரிய முடியாதுதான். ஆனால் என் தாய்க்கும் ஒரு ஸ்தானம், தகுதி, அந்தஸ்து உண்டு. அவர், உன்னிடம் அடி வாங்கிக் கொண்டு, வயிறு நிரப்பி உயிர் வாழ வேண்டும் என்ற கேவலமான நிலையில் இல்லை. அப்படித்தான் இருக்க வேண்டும் என்றால், அவர் இறந்தாலும் பரவாயில்லை. ஆனால் நீ அவரை அடிக்காதே... ஓங்கிய உன் கையை தயவு செய்து அப்படியே நிறுத்திவிடு... '' என்கிறார்.
இப்போது மறுபடியும் ஒருமுறை அந்தக் கவிதை வரிகளைப் படியுங்கள். ஒருவன் தன் தாய்மேல் கொண்டிருக்கும் அன்பு, பாசம், அவருக்கு கொடுக்கும் மரியாதை, முக்கியத்துவம் எல்லாம் புரியும். இதுவே, தன் தாயை அடிப்பவர் வேறு யாராவதாக இருந்தால் அவர் எப்படி நடந்து கொள்வாரோ... ஆனால் மனைவியாக இருக்கப்போய் கையாலாகாத நிலையில் இருக்கிறார். ஆனாலும், இந்த நிலை இனியும் இப்படியேதான் தொடரும்... விடிவே இல்லை என்றால் - அத்தகைய நிலையில், அடிவாங்கிக் கொண்டு தனது தாய் உயிர் வாழ்வதைவிட, எந்த துன்புறுத்தலும் இல்லாமல் தானே தாய்க்கு விஷம் வைத்து ஒரேயடியாக கொன்றுவிடவும் தயார் என்கிறார்.
இன்னொருபக்கம் - 'அப்படியே செய்து விடுங்கள்' என்று மனைவி பொது இடத்தில்... முகத்துக்கு முகம் நேரடியாகச் சொல்லத் தயங்கும் நிலை இருந்தால், 'பரவாயில்லை.... அதைச் சூசகமாகச் சொல்!' என்றும் கேட்கிறார். அதாவது, 'Adjust பண்ணிப் போ' என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், அதற்கு சாத்தியமே இல்லை என்று நினைத்தால், சூசகமாக அதைச் சொல்லிவிடு... ஆனால் அடிக்காதே!' என்பது வேண்டுகோள்!
வளர்ந்த ஒருவனின் தாய் பாசத்தை விளக்கும் இப்படியான ஒரு கவிதையை, நான் இதுவரையில் வேறு எங்கும் படிக்கவில்லை. இந்த கவிஞரே எழுதிய முழு கவிதைத் தொகுப்பை நான் படித்திருந்தாலும், இப்படியான வலுவான ஒரு கவிதையை இன்னும் நான் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.
உஷாவுக்கு மட்டுமல்ல! கவிதை எழுத முயலும் இன்னும் பலருக்கும்கூட 'நல்ல கவிதை' என்பதை நான் உணர்ந்த வகையில் அடையாளம் காட்டுவதுதான் நோக்கம்.
எனவே, இதைப் படிக்கும் கவிதை முயற்சியாளர்கள், 'ரசிக்கத்தக்க... இது போன்ற கவிதைகளுக்கு இலக்கு வைத்து நகர்ந்தால் விரைவில் அதை எட்டிவிட முடியும்' என்று நம்புகிறேன். இப்போது அந்தக் கவிதையை முழுவதுமாகத் தருகிறேன்.
அம்மா
---------
அவள் எனக்கு பசி தீர்த்தவள்.
நீ, காமம் தீர்த்தவள்
எருமைபோல வளர்ந்த நான்
அவளுக்குக் குழந்தை
எனக்கு, என்னைப் போலல்லாத
ஒரு பிள்ளை வேண்டும்
பற்றி எரிகிற தீயை
புணர்ந்து அணைக்கிற அன்பு மனைவியே
ஓங்கிய கையை நிறுத்திவிடு.
மூச்சுத் திணறுகிறது
சூசகமாய் ஒரு வார்த்தை சொல்
சோற்றில் விஷம் வைத்து
என் அம்மாவைக் கொன்றுவிடுகிறேன்.
- என்.டி.ராஜ்குமார்.