பங்குசந்தை பற்றி இங்கே தனியாளகப் போராடிக் கொண்டிருக்கும் நண்பர் சசியின் கட்டுரைகள்... பட்ஜெட் பற்றிய விமர்சனங்கள் படித்திருப்பீர்கள். அவருக்கு தோள் கொடுக்கும் விதமாக என்னால் முடிந்ததைச் செய்யலாம் என்று எண்ணம். அதனால், 'புதிய பார்வை' இதழில் நான் எழுதிய பொருளாதாரம் பற்றிய கட்டுரைகளை இங்கேயும் அரங்கேற்றும் முடிவுக்கு வந்துள்ளேன். நண்பர் அண்ணாகண்ணன் கொடுத்த ஐடியாவும் இதற்கு காரணம் - நம் அனைத்து படைப்புகளையும் ஒரே இடத்தில் சேகரித்து வைக்கும் களஞ்சியமாக இந்த தொகுப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு உதவும்தானே! இனி கட்டுரைக்கு செல்வோம். இந்த கட்டுரை 'புதிய பார்வை 'யில் வௌதயாகி சில மாதங்கள் ஆகிறது. - சந்திரன்
பங்குசந்தைக் குறியீட்டெண் குழப்புகிறதா?
பங்குசந்தை பற்றிய சாமானியனின் பயத்திற்கு பல காரணங்கள். அதில் முக்கியமானது இத்துறையில் புழங்கும் புரியாத வார்த்தைகள். மிரட்டும் இந்த வார்த்தைகளே, 'இது ஏதோ பெரிய விஷயம் போல' என்ற மாயையை உண்டாக்கிவிடுவது உண்மை. மற்ற பல விஷயங்களில் விவரமான பலரும் கூட, இந்த மாதிரி மாயாஜால வார்த்தைகளுக்கு மயங்கி பயப்படுகிறார்கள் என்பதுதான் யதார்த்தம். ஆனால் நிஜத்தில், இந்த வார்த்தைகள் எல்லாம் சூப்பர் கம்ப்யூட்டரோ... கிரியோஜினிக் என்ஜின் ரகசியமோ அல்ல!
உதாரணமாக, சின்னத்திரை செய்தி முதல் தினசரிகளின் (அரிதாகி வரும்) வணிகப் பக்கங்கள்வரை பங்குசந்தை என்றதும் குறிப்பிடப்படுவது, குறியீட்டெண் என்ற சமாச்சாரம்தான். ஒருவரியில் சொல்வதானால், பங்குசந்தையில் பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தைக் காட்டும் அளவுகோல்தான் அது. அவ்வளவுதான். ஆனால், இது பற்றி தௌதவான விபரம் சொல்லப்படாததால் அது மிரட்டுகிறது. இந்த குறியீட்டெண்ணை எப்படி கணக்கிடுகிறார்கள்... அதன் உள்விவகாரங்கள் என்ன என்பதைப் பற்றி... இதுபோல, பங்குசந்தையில் புழங்கும் இதர புதிய வார்த்தைகள் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வது அதிகமானவர்களை பங்குசந்தை பக்கம் ஈர்க்க உதவும் என்று நம்புகிறேன் - கம்ப்யூட்டரில் தமிழிலேயே கடிதம் அனுப்பலாம்... நகல் தயாரிக்கலாம் என்றானபின் இணையத் தமிழ் எழுத்தாளர்கள் எண்ணிக்கையே எண்ண முடியாத அளவுக்கு அதிகரித்தது போல.
'நீந்த விரும்பினால், தண்ணீரில் இறங்கித்தான் ஆக வேண்டும்' என்பதுபோல, முறையான வழியில் நாலு காசு பார்க்க எண்ணிய பலரை பங்குசந்தை இன்று காந்தம் போல ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. அவர்களுக்கு இந்த மாதிரி விஷயங்களைத் தௌதவாக்கிவிட்டால்?!
முன்பே சொன்னபடி வெகுஜன திரை ஊடகங்கள் எல்லாவற்றிலும், குறியீட்டெண் என்ற அந்த ரெண்டு... மூன்று... எண்களின் பட்டியலை வாசிப்பது சடங்காகிவிட்டது. அதில் மும்பை பங்குசந்தை குறியீட்டெண் 'பிஎஸ்இ சென்ஸெக்ஸ்' என்றும், தேசிய பங்குசந்தை குறியீட்டெண் 'நிப்டி' என்றும் சொல்லப்படும் இவை தொடங்கிய வரலாறு கூட கொஞ்சம் சுவாரஸ்யமானதுதான்.
318 வியாபாரிகள், ஆளுக்கு ஒரு ரூபாய் முதல் போட்டு 130 வருஷத்துக்குமுன் தொடங்கியதுதான் இந்திய பங்குசந்தையின் முதல் வித்து. இந்த வித்து விழுந்தது மும்பையில். அதாவது, 1875ம் ஆண்டு இந்த வியாபாரிகள் போட்ட முதல் (முதலீடு), கால ஓட்டத்தில் இத்தனைப் பெரிய அமைப்பாக வளர்ந்து இன்று இந்திய அரசியல், மத்திய அரசு, அதன் கொள்கைகளில் மாற்றங்களை உண்டாக்கவல்ல திறன் பெற்று நிற்கிறது. ஆரம்பித்த அந்தநாளில் இந்த வியாபாரிகளுக்கு அன்றிருந்த ஒருசில நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில்... விற்பதில் மட்டும்தான் அக்கறை. மற்ற விஷயங்களில் அல்ல. ஆனால் பின்னாளில் மற்றவர்களும் இதுபற்றித் தெரிந்து... நாமும் பணம் பண்ணிப் பார்க்கலாம் என்று முத்துக்குளிக்க முழ்கியபோது இக்கலாச்சாரம் பரவி, பத்திரிகைகளில் பேசப்பட்டது. அப்போது, 'நேற்று பங்கு வர்த்தகம் எப்படியிருந்தது' என்பது பற்றி கருத்து சொல்ல ஒரு காரணி தேவைப்பட்டது.
100 கம்பெனிகளின் பங்குகள் அங்கே விற்பனையாகின்றன என்றால், அதில் எத்தனை கம்பெனிகளின் பங்குகள் ஏறுமுகத்தில் இருந்தது, எத்தனை சரிந்தன, எவையெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தன என்று அறிய ஒவ்வொரு பங்குவிலை பற்றியும் வில்லாவாரியாக எழுத... பேச... வேண்டியிருந்தது. எனவே 'இத்தனை எண்களையும் ஒருசேர நினைவில் கொள்வதைத் தவிர்க்க வழியிருக்கா?' என்று பார்த்தபோது உருவானதாகத்தான் இந்த குறியீட்டெண்ணைச் சொல்ல வேண்டும். ஆனால் இது, இன்றுள்ளபடி உரு பெறுவதற்குள் 100 வருஷங்களுக்கு மேல் உருண்டோடி விட்டன.
அத்துடன், மும்பையில் விழுந்த முதல் விதை... கல்கத்தா, தில்லி, அகமதாபாத், சென்னை என பல இடங்களிலும் விழுதுவிட்டு தன் இருப்பையும் விரிவாக்கிவிட்டிருந்தன. அதன்பின், 1986ல்தான் குறியீட்டெண் என்ற இந்த அடையாளம் உருவானது. ஆனால் அந்நாளில் மற்ற பல இடங்களில் இருந்த விற்பனையை ஒன்று சேர்த்தாலும், அதைத்தாண்டி பலமடங்கு விற்பனை நடந்தது மும்பை பங்குசந்தையில்தான். எனவே இங்கு விற்பனையான பங்குகளின் விலை அடிப்படையில் அமைத்தாலே அது உண்மையைப் பிரதிபலிக்கும் என்று, 'பிஎஸ்இ சென்ஸெக்ஸ்' (BSE Sensex - Bombay Stock Exchange Sensetive Index) என்றே இதை அழைத்தார்கள். இது தொடங்கிய காலத்தில் அன்று விற்பனையானவற்றிலேயே அதிக சுறுசுறுப்புடன், நிறைய விற்பனையான முன்னணி பங்குகள் 30ன் விலையை அடிப்படையாகக் கொண்டு இதைக் கணக்கிட்டார்கள்.
அது பற்றிய இன்னும் விரிவான தகவலுக்குச் செல்லும்முன், இதற்கு பயன்படுத்தப்படும் Market Capitalization என்ற வார்த்தையைப் புரிந்து கொள்வது அவசியம். உதாரணமாக, XYZ என்ற நிறுவனம் சந்தையில் பங்கு விற்பதாக வைத்துக் கொள்வோம். அன்று மும்பை பங்குசந்தையில் அதன் பங்கு ஒன்று, 100 ரூபாய்க்கு விற்கிறது. அன்றைய தினத்தில், அந்த நிறுவனத்தில் மொத்தமாக 1 லட்சம் பங்குகள் இருப்பதாகக் கொண்டால் (அதன் மொத்த பங்குகளின் எண்ணிக்கை), அந்த நிறுவனத்தின் Market Capitalization = 100 x 1 லட்சம் = 1 கோடி. வேறுவிதமாகச் சொல்வதானால், ஒரு பங்கு 100 ரூபாய்க்கு விற்பதால், நம்மிடம் 1 கோடி ரூபாய் இருந்தால், அந்த நிறுவனத்தின் எல்லா (1 லட்சம் ) பங்குகளையும் நம்மால் விலைக்கு வாங்கிவிட முடியும். அதன்மூலம், அந்த நிறுவனத்தின் தனிமுதலாளியாக நாம் ஆகிவிட முடியும். அவ்வகையில் ஒரு நிறுவனத்தை மொத்தமாக விலைக்கு வாங்கிவிட தேவைப்படும் மொத்த பணமதிப்புதான் அந்நிறுவனத்தின் Market capitalization எனப்படுகிறது. கணித வழியில் சொல்வதானால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளின் எண்ணிக்கை x ஒரு பங்கின் அன்றைய விலை.
இவ்வாறு, பல நிறுவனங்களின் 'மார்க்கெட் கேப்பிடலைசேஷன்' ஒவ்வொரு நாளும் கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் பங்குசந்தையின் உயிர்நாடி துடிக்கிறது. பெருவாரியான பங்குகளின் விலை உயர்ந்தால்.... அவற்றின் 'மார்க்கெட் கேப்பிடலைசேஷன்'-ம் உயர்கிறது. எனவே அந்த மார்க்கெட் கேப்பிடலைசேஷனைப் பொறுத்து, அன்றைய தினம் பங்கு சந்தையில் எத்தனைப் பணம் புழங்கியது என்று கணக்கிட முடிகிறது. எனவே 'மார்க்கெட் கேப்பிடலைசேஷன்' அல்லது 'மார்கெட் கேப்' என்றும் குறிப்பிடப்படும் இந்தத் தகவல்தான் முக்கியம்.
எனவே, ஒரு நாளில் அதிகபட்ச மார்க்கெட் கேப் கொண்ட முன்னணி நிறுவனங்களை பங்குசந்தைக் குறியீட்டெண் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொண்டார்கள். முன்பே சொன்னபடி இப்படி முதன்முதலில் கணக்கிட்டது 1986ல்தான். அப்போது பங்குசந்தைக் குறியீட்டெண்ணைக் கணக்கிட 1978-79ம் நிதியாண்டின் சராசரி பங்குவிலைகள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டன. அவற்றை, உத்தேசமாக 100 புள்ளிகள் என்ற அடிப்படை ஆரம்ப மதிப்புக்கு ஒப்பிட்டு, கணக்கைத் தொடங்கினார்கள். அதிலிருந்து அது மௌள மௌள உயர்ந்து வந்துள்ளது. அதாவது, இன்று 4000 புள்ளியை எட்டியது... 50 புள்ளிகள் சரிந்தது என்று சொல்வதெல்லாம் இந்த 100 புள்ளிகளில் தொடங்கியதுதான்.
அதேபோல, அப்போது முன்னணியில் இருந்த 30 பங்குகள் மட்டும் குறியீட்டெண் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள், இத்துறையின் வளர்ச்சி, பரவலாக்கம் போன்றவற்றால் 30 பங்குகளின் விலையை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கிடுவது அர்த்தமில்லாமல் இருப்பதாகத் தோன்றியது. அதனால் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் பங்குகளை பரிசீலிக்க வேண்டியிருப்பது உணரப்பட்டது. எனவே 30 என்ற எண்ணிக்கையை 100 என உயர்த்திக் கொண்டு, முன்னணி 100 நிறுவனங்களின் Market Capitalizationஐ வைத்து, இன்னொரு புதிய குறியீட்டெண்ணைக் கணக்கிட்டார்கள். இது தொடங்கியது 1989ல். ஆனால் இது தேசிய அளவில், அதாவது - பங்குசந்தை கால்பரப்பிய மற்ற இடங்களில் விற்பனை தொடங்கிய இதர நிறுவனங்களின் நிலவரங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ணியதால் மும்பை சந்தையுடன், கல்கத்தா, தில்லி, அகமதாபாத் மற்றும் சென்னை பங்குசந்தைகளில் பதிவு பெற்ற பங்குகளின் மார்க்கெட் கேப்பிடலைசேஷனையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அதில் முன்னணி 100 நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாகக் கொண்டார்கள். இதற்கு, 1983-84ம் ஆண்டில் அவற்றின் சராசரி விலையை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, புதிய குறியீட்டெண் கணக்கிடப்பட்டது. ஆரம்பத்தில், இதை தேசிய குறியீட்டெண் என்று சொல்லிவந்தாலும், 1996 அக்டோ பர் 14ல் இது தனது பெயரை 'பிஎஸ்சி 100 (BSE-100)' என மாற்றிக் கொண்டது.
ஆனால் இந்த மாற்றமும் எதிர்பார்த்த விளைவுகளை உண்டாக்கவில்லை. அதாவது, சந்தையில் பங்குகளின் விலையை, அவற்றின் போக்கை மிகச் சரியாக பிரதிபலிக்கவில்லை. எனவே மேலும் பரவலாக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு, 1994 மே 27 அன்று, புதிதாக இரு குறியீட்டெண் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அது முறையே BSE-200 என்றும், Dollex-200 என்றும் குறிப்பிடப்படுகிறது. இன்னொரு பக்கம் ஒரு நேரத்தில் முன்னணியில் இருக்கும் கம்பெனிகள் தொடர்ந்து அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில்லை; அல்லது முடியவில்லை என்பதால் குறியீட்டெண் கணக்குக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிறுவனம் எவை என்ற பட்டியலிலும் மாற்றங்கள் வரத் தொடங்கின. சம்மந்தப்பட்ட பங்குசந்தை நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த நிறுவனங்கள் பல உள்ளும், வௌதயும் பயணிப்பதும் இயல்பான விஷயமானது.
இந்த குறியீட்டெண் கணக்குமுறை 2003 செப்டம்பரில், அடுத்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டது. இந்த மாற்றம், இன்று உலக அளவில் பெரும்பாலான இடங்களில் பங்குசந்தை குறியீட்டெண் கணக்கிடும் முறையைப் போன்றது. அதாவது, முன்பு கையாண்ட முறையில் - ஒரு நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் கணக்கிட, அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்தமான எல்லா பங்குகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் நிஜத்தில் ஒரு நிறுவனத்தின் எல்லா பங்குகளும் பங்கு வர்த்தகத்தில் பங்கேற்பதில்லை. உதாரணமாக, ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய அம்பானிகளோ, டாடா, பிர்லா நிறுவனங்களைத் தொடங்கியவர்களோ அவர்களது நிறுவனத்தின் பங்குகளில் கணிசமானவற்றை நிரந்தரமாக தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி, இந்த நிறுவனப் பங்குகளை பெருமளவில் வாங்கி வைத்திருக்கும் LIC போன்ற நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டுகள், நிறுவன முதலாளிகளுக்கு நெருக்கமான நண்பர்கள், அவர்களது மற்ற நிறுவனங்கள் போன்றவை தங்களிடம் உள்ள பங்குகளை சந்தையில் அன்றாட விற்பனைக்கு விடுவதில்லை. நிரந்தரமாக, அல்லது பெரும்பாலான நாட்களில் அவை முடங்கித்தான் கிடக்கின்றன. எனவே அவை சந்தையில் பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தில் எந்தவகையிலும் பங்களிப்பதில்லை. எனவே அவற்றை குறியீட்டெண் கணக்கிடும்போது முழுஅளவு ஈடுபாடு கொண்டவை என எடுத்துக் கொள்ள வேண்டாம். சந்தைக்கு வந்து போய், விலை ஏற்ற, வீழ்ச்சியில் பங்களிக்கும் அந்நிறுவனப் பங்குகளின் அளவை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்ற யோசனைதான் இது. இவ்வாறு தொடர்ந்து பங்களிக்கும் பங்குகளின் அளவை Free floated பங்குகள் என்று வகைப்படுத்தி, அவற்றின் அளவை கணக்கிட்டு, அந்த விகிதத்தில் மட்டுமே அந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிடலைசேஷன், குறியீட்டெண் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனால் பலன் உண்டா, அப்படியானால் என்ன லாபம் என்பது சரியான கேள்விதான். என்ன பலன் என்றால் - ஒரு தரப்பினர் சந்தைக்கு அனுப்பாமல் நிரந்தரமாக வாங்கி வைத்திருக்கும் பங்குகளால்...., ஒரு குறிப்பிட்ட அளவு பங்குகள் மட்டுமே சந்தையில் புழங்குவதால்...., அந்த பங்கை அதிகமாக வாங்கவோ, விற்கவோ எண்ணுபவர்களுக்கு ஏற்படும் சிரமம், அதனால் ஏற்படும் விலை மாற்றம், இதன்மூலமான லாப நஷ்டம் போன்றவை பங்குசந்தையின் போக்கில் உண்டாக்கும் பாதிப்புகள் உண்டு. இந்த பாதிப்பு, முன்பு இருந்ததைவிட இப்போது கையாளப்படும் புதிய குறியீட்டெண் கணக்கிடும் முறையில் இன்னும் அதிகமாக பிரதிபலிக்கப்படுகிறது என்பதுதான். இன்றைக்கு டிவியும், செய்தித்தாள்களும் அறிவிக்கும் குறியீட்டெண்கள் எல்லாம் இந்த Free float market Capitaliaztion வகையில் கணக்கிடப்பட்டதுதான்.
இன்றைய நிலையில் இந்த குறியீட்டெண்களை பங்கு சந்தைகளே - பங்கு வர்த்தகம் நடைபெறும் நேரத்திலும் கூட, 15 நொடிக்கு ஒருமுறை கணக்கிட்டு அறிவித்துவிடுகின்றன. அவற்றைத்தான் மற்ற ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. இப்படியே ஏற்பட்ட ஒருபக்க வளர்ச்சிக்கு மறுபுறம், கணிணியின் பயன்பாடு அதிகரித்தபோது முதலில் மும்பை பங்கு சந்தை ஆன்லைன் வர்த்தகம் (BOLT)என்பது அறிமுகமானது. இன்னொருபக்கம் OTC என்ற பெயரில் Over The Counter exchange of India என்ற இன்னொரு பங்குசந்தை உரு பெற்றது. ஆனால் அதையும் தாண்டிய முன்னேற்றங்களுடன் உருவான 'தேசிய பங்கு சந்தை (National Stock Exchange)' இன்று நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டும் கம்ப்யூட்டரின் வழியாகவே பங்குவிலைகளைப் பார்த்து வணிகத்தில் ஈடுபடலாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டதால் மும்பை பங்குசந்தையே மெல்ல மெல்ல தன் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது.
மும்பை பங்குசந்தைப் போலவே, தேசிய பங்குசந்தையும் தனக்கென தனியான குறியீட்டெண்களைக் கொண்டுள்ளது. ஆனால் இவற்றைக் கணக்கிடும் முறைகளில் பெரிதான மாற்றங்கள் எதுவும் இல்லை. அடிப்படை விஷயங்கள் மும்பை பங்குசந்தை குறியீட்டெண்ணுக்கு என்னவோ அதேதான். எனினும் தேசிய பங்குசந்தை, இந்த பணிக்கு தற்போது சர்வதேச நிறுவனமான Standard & Poor என்ற நிறுவனத்தையும், இந்திய மதிப்பீட்டு நிறுவனமான CRISILலையும் துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் தொடர்பு உள்ளதால் தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் தற்போது S&P CNX என்ற முன்அடைமொழியுடன் வழங்கப்படுகிறது. அதனால் 'நிப்டி' என்பதை இன்றைய நிலையில் S&P CNX NIFTY என்று குறிப்பிடுவதுதான் டெக்கினிக்கலாக சரி!
அதோடு, ஒரு குறிப்பிட்ட துறை, குறிப்பிட்ட இலக்கு கொண்ட நிறுவனங்களில் மட்டும் முதலிட விரும்புபவர்களின் தேவைகளையெல்லாம் கணக்கில் கொண்டு இன்று S&P CNX NIFTY, CNX NIFTY JUNIOR, S&P CNX DEFTY, CNX IT, S&P CNX 500, CNX MIDCAP 200 என்று பல குறியீட்டெண்கள் வழக்கத்துக்கு வந்துள்ளன. எனினும் இவை பற்றிய நுணுக்கமான தகவல்கள் இத்துறையை ஆழமாக அணுகுபவர்களுக்குத்தான் அதிகம் தேவைப்படும். நம்மை போன்ற சராசரி முதலீட்டாளருக்கு இந்த எண்கள் சொல்லும் செய்தி மட்டுமே போதும். குடலாப்ரேஷன் செய்தது போல அவற்றை கணக்கிடும் உள்விவகாரம் தேவைப்படும் ஆட்கள் 'புதிய பார்வை'யில் இப்படியான ஒரு கட்டுரைக்காகவா காத்திருப்பார்கள்!?