மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், டிசம்பர் 17, 2025

சாமானியனுக்கும் AI....

அதிரா....

இதென்ன.... பெண்ணின் பெயரா.... ?

'ஆதிரை' என்ற பெயரைக் சங்கத் தமிழில் படித்ததாக... கேட்டதாக ஞாபகம். இதென்ன அதிரா... ஒருவேளை, வெற்றுமொழிச் சொல்லா...? அப்படியானால், இதற்கு என்ன பொருள்?

இப்படியெல்லாம் யோசிக்கிறீர்களா...

AI... அதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகை எங்கெங்கோ சென்று கொண்டிருக்கையில் இப்படியெல்லாம் யோசிச்சி நம்ம நேரத்தை வீணடிக்க வைக்கிறாங்கப்பா என அலுத்துக் கொள்ள வேண்டாம்.
நீங்கள் யோசிக்கும் அந்த செயற்கை நுண்ணறிவு குறித்து.... வருங்காலத்தில் பலரது வேலைக்கு வேட்டு வைக்கும் என்று சொல்லப்படும் நவீன தொழில்நுட்பமான AI குறித்து சாமானியர்களுக்கு எந்த அளவு தெரிந்திருக்கிறது என்ற கேள்வியோடு நின்றுவிடாமல்.... அதைத் தெரிவிப்பது எப்படி.... வரும் நாட்களில் புதிது புதிதாக எழும் பல சவாலை எளிதாகச் சந்திக்க... சமாளிக்க வேண்டும் என்றால், நம் எல்லாருக்கும் AIயின் அடிப்படைகளாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து... அந்த நோக்கத்தில்.... அதைப் பரவலாக்கும் திட்டத்தில் செயல்படும் ஒரு அமைப்பாக அதிராவை நான் உணர்கிறேன்.

அதிரா என்ற சொல்லே... அதன் ஆங்கில மூலமான ADiRA ... AI for Digital Readiness & Advancement (ADiRA) என்பதன் சுருக்கம்தான். இந்த அமைப்பு மூலம் தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த பரவலான புரிதலை உண்டாக்க AI in Tamil Ecosystem என்ற முயற்சியை முன்னெடுத்துள்ளனர். அதற்காக ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள். அந்தவகையில் நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் நான் பங்கேற்றேன்.

முரளி கிருஷ்ணன் பயிற்றுநராக விரிவான தகவல்களைத் தமிழில் பகிர்ந்து கொண்டார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது போன்ற பல பயிற்சி வகுப்புகளில் உரையாடல் மொழி ஆங்கிலமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பயிற்றுநர் தமிழ் மொழியை நன்கு அறிந்தவர் என்றாலும் கூட பங்கேற்போர் அனைவருக்கும் தமிழில் சொன்னால் ”புரியாது” என்பது போன்ற காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதைவிட கொடுமை என்னவென்றால், சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த இது போன்ற வேறொரு துறை பயிற்சி வகுப்பில் நான் பணம் செலுத்தி பங்கு பெற்றேன். பயிற்று மொழி ஆங்கிலம் மட்டும் என்று வாய்மொழியாக மட்டுமின்றி, எழுத்துபூர்வமாகவும் சொல்லப்பட்டது. ஆனால், பயிற்சியின்போது, பயிற்றுநருக்கு தாய்மொழி ஹிந்தி என்பதால்.... தொடர் உரையின்போது.... சிக்கலான விஷயங்களைச் சொல்ல முயலும்போது... பலருக்கும் தம்மையும் மீறி தாய்மொழி சொற்கள்... வட்டார வழக்கு பிரயோகங்கள் உள்ளே நுழைந்துவிடும் என்பதால்... சுமார் 10 சதம்வரை அவர் ஹிந்தியில் பேசினார்.

”நீங்கள் ஹிந்தியில் குறுங்கதைகள் சொல்வதை நான் எதிர்க்கவில்லை; ஆனால், அதன் ஆங்கில மொழியாக்கத்தையும் தொடர்ந்து சொன்னால் நாங்களும் புரிந்துகொள்வோம் என்று போராடிப் பார்த்தேன். ஹிந்தியில் பயிற்றுநர் சொல்லும் அந்த குறுங்கதைகளைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்கும்போது அதன் அடிப்படை சாரம் புரியாமல் தவிப்பேன். எடுத்துகொண்ட பாடத்தில் சொல்ல வேண்டிய விஷயங்கள் மட்டும் ஆங்கிலத்தில் சொல்லப்படும். இருந்திருக்கலாம். ஆனால், கோவிட் பெருதொற்றுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வாய்ப்பான E learing எனக் குறிப்பிடப்படும் மின்னணு தொலைக்கல்வியில்... அதற்கான பயிற்சி வகுப்புகளில்..... நாம் எதிர்பார்ப்பது பாடத் திட்டத் தகவல்கள் மட்டுமில்லை என்பதுதானே உண்மை!

பாடத் திட்டத் தகவல் மட்டும்தான் தேவை... விருப்பம்... எதிர்பார்ப்பு என்றால், ஏற்கனவே இருந்த தொலைத்தூரக் கல்வியின் அஞ்சல்வழி வரும் புத்தகங்கள் மட்டும் போதுமே! நமது விருப்பம் போல, ஓய்வான நேரத்தில் மெல்ல படித்துக் கொள்ளலாமே! மற்றவர்கள் எப்படியோ... ஆனால், நான் இதுபோல இணையத் தொடர்பு மூலம் (Recorded session அல்லாத) நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளின் தனித்தன்மையாக கருதுவது வேறு. பயிற்றுநரின் விரிவான அனுபவமும், நகைச்சுவையும், பிற ஆற்றலும் சேர்ந்தே இவ்வகையில் பகிரப்படுவதால், பயிற்றுநரின் தனித்தன்மை பொறுத்து, இத்தகைய வகுப்புகள் கொடுக்கும் உணர்வு தனிரகம். பல நேரங்களில் அந்தந்த துறையின் ஆகச் சிறந்த ஆளுமைகளோடு சில மணி நேரம் பயணித்த அனுபவங்களை நம் வீட்டில்.... அலுவலகத்தில் இருந்தே பெற்ற உணர்வை இந்த webinar கொடுப்பதாக நான் உணர்ந்ததுண்டு. அதைத்தான் இவ்வகையான பயிற்சி வகுப்புகளில் நான் எதிர்பார்க்கிறேன்.

AI குறித்து தமிழகத்தில்... தமிழ் மக்களிடம் அச்சமற்று அணுகும் அறிமுகத்தை உண்டாக்க முயலும் அதிராவின் முயற்சி பாராட்டுக்குரியது. அதோடு, இந்த பயிற்சி தற்போது அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தினரையும், மருத்துவ துறையினரையும் கருத்தில் கொண்டு நடத்தப்படுவதாக முரளி கிருஷ்ணன் தெரிவித்தார். விருப்பமுள்ள ஊடக அமைப்போ, மருத்துவமனையோ போதுமான எண்ணிக்கையிலான ஆர்வலர்களோடு அணுகினால், அவர்களது வளாகத்திற்கு சென்றும் இந்த பயிற்சி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கணினி தொழில்துறையில்... மென்பொருள் தளத்தில் முன்னிலையில் உள்ள தமிழர்கள் செயற்கை நுண்ணறிவு தளத்திலும் பின்தங்கிவிடவில்லை என்று சொன்ன முரளி கிருஷ்ணன், தமிழ் மொழி தொடர்பான பணிகளுக்கென தனியாக பல AI tools -ஐ உருவாக்கியுள்ளதுடன், சர்வதேசத் தேவைக்கான ஆங்கில மொழியில் செயல்படும் பல tools ஐயும் உருவாக்கி உலகின் முன்னணி பங்களிப்பாளர்களாக உள்ள தமிழர்கள்... அவர்களது tools ஐ பற்றியும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த அடிப்படை பயிற்சி முற்றிலும் கட்டணம் இன்றி, பங்கேற்பாளர்களுக்கு செலவு இல்லாமால் இலவசமாக வழங்கப்படுவதால், ஆர்வமுள்ள யாரும் இந்த பயிற்சியை பெறுவது நல்லது. வரும் நாட்களில் எழ வாய்ப்புள்ள சவால்களின்போது நாம் வழக்கொழிந்த.. தகுதியற்ற பின்வரிசைக்காரர்களாக நின்றுவிடாமல்... போட்டியில்.... முன்னணியில் நிற்க நம்பிக்கை தரும் ஆரம்ப பள்ளி பாடமாக இதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த பயிற்சியில் முழுமையாகக் பங்கேற்பவர்களுக்கு இதற்கான சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் விவரங்களைப் பெற முரளி கிருஷ்ணனைத் தொடர்பு கொள்ளலாம். தொலைப்பேசி எண் : 9003319806.