EVM எனப்படும், எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் பற்றி தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். கொஞ்சம் பொறுங்கள்! இரண்டு நாளில், பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் வௌதயானாதும் - கருத்துக் கணிப்புகள் சொல்வது போல, லாலு அதில் பெருந்தோல்வி அடைந்தால்.... அடுத்த பூதம் இன்னும் கொஞ்சம் பெருசாகக் கிளம்பக் கூடும்.
ஏற்கெனவே லாலு, EVM பற்றி 'Expert comment' சொன்னவர்தான்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக பாராளுமன்றத் தேர்தல்களில் அவர் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுவிட்டனர். அதனால் தப்பியது EVM. இல்லாவிட்டால் அப்போதே இந்தப் பிரச்னை தலையெடுத்திருக்கும். இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. ரெண்டு நாள்.... Just ரெண்டே நாள் பொறுங்கள்.
அடுத்த வாரத்தில் 'அம்மா'வோடு சேர்ந்துகொண்டு லாலு ஆட்டம் போட நேர்ந்தால் ஆச்சரியப்படாதீர்கள். 'கோர்ட்டுக்கு போகிறோம்' என்று கூட கிளம்புவார்கள். ஆனால் ஒன்று! கோர்ட்டுக்கு போனாலும் இந்த விஷயத்தில், இனி தப்பு அரசியல்வாதிகளால் எதையும் சாதிக்க முடியாது. காரணம் - EVM ஏற்கெனவே கோர்ட்டு படியேறி... இறங்கி... வெற்றி பெற்றுதான் இப்போதைய இடத்தை அடைந்துள்ளது.
இது கோர்ட் படியேறிய முன்னணி, பின்னணி சமாச்சாரம் பற்றி மேலும் விவரங்கள் பெற விரும்பவர்களுக்கே - முதன்முறையாக ஒரு முழு தேர்தலுக்கு EVM பயன்படுத்த முடிவு செய்தபோது நான் எழுதிய 'எப்படி ஜெயித்தது எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்?' என்ற இந்தக் கட்டுரை.
-----------------------------------------------------------------------------------------------
எப்படி ஜெயித்தது, எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்?
எப்படி ஜெயித்தது, எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்?
பத்து வருஷத்துக்கும் மேல் நடந்தது இந்தப் 'போர்'. அதிகாரத்தைப்பிடிக்க, ஆட்சியாளர்களிடையே நடக்கும் அடாவடிப்போர் அல்ல இது. புரட்டுத்தனம் பண்ணும் அரசியல்வாதிகள் எல்லாரும் ஒரே அணியில் திரண்டு நிற்க, தனி மரமாய் நின்று, எதிர்த்த போர். சொல்வது, பேசுவது எல்லாம் ஜனநாயகம்'; ஆனால் அதை முழுமையாக இடம்பெற விடாமல், பித்தலாட்டம் செய்யும் நபர்களை எதிர்த்து நடந்த போர். கடைசியில், ஜெயித்தது தனிமரம் தான். ஆனால் என்ன? இன்று கிடைத்துள்ளது பாதி வெற்றி தான். முழு வெற்றிக்கு இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும். அதுவும் விரைவில் கிட்டிவிடும்.
தனிமரம் அதையும் சாதிக்கும். காரணம் - வெற்றிக்காக அவசரப்படும், ஆதங்கப்படும் உயிருள்ள ஜீவன் அல்லவே இது. உயிரற்ற, ஆனால் 'சிலிக்கன் சிப்' மூலம் துடிப்புக் காட்டும் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின். அதாவது, சுத்தத் தமிழில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.
அடுத்தமாதம் 4-ம் தேதி கோவா மாநிலத்தில் நடக்க உள்ள சட்டசபையின் 40 தொகுதி தேர்தல் முழுவதும், இந்த வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தான் நடக்க உள்ளது. இத்துடன் 'செப்டம்பரில் வரும் மக்களவைத் தேர்தலிலும்-எல்லா மாநிலங்களின் சில தொகுதிகளிலாவது இந்த இயந்திரம் பயன்படுத்தப்படும்' என தலைமைத் தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில் சொல்லியிருக்கிறார்.
நாடு முழுவதும் நடத்தப் போதுமான வாக்குப் பதிவு இயந்திரங்கள், இப்போது ஸ்டாக் இல்லை என்பது இன்னொரு காரணம். தற்போது தேர்தல் கமிஷனிடம் 1.5 லட்சம் இயந்திரங்கள்தான் உள்ளன. இன்றைக்கு அரசியல் கட்சிகள் முதல், அதிகார வட்டம் வரை (வேறு வழியில்லாமல்) ஏற்றுக் கொண்டு விட்ட இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உருவானது, 1989-ல். ஆனால் இப்படி ஒரு மெஷின் தேவை என்ற சிந்தனை உருவானது 1977லேயே. மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் தேர்தல் சீர்திருத்தம் பற்றிப் பேச்சு வந்த போது தான், இதற்குப் பிள்ளையார் சுழி போட்டார்கள். இதை ஒட்டி 1979-ல் முதல் மாடல் உருவானது. அதில் சில திருத்தங்களும், மாற்றங்களும் தேவைப்பட்டதால், அடுத்த முன்னேறிய மாடல் 1980 செப்டம்பரில் உருவானது. கேரளத்தில் உள்ள பரூர் தொகுதி உட்பட மொத்தம் 11 தொகுதிகளில் இந்த மாடலின் சோதனை ஒட்டம் நடந்தது. இது, 1982-83 தேர்தலின் போது. ஆனால் தேர்தல் முடிவு ஏற்கப்படாமல், விஷயம் கோர்ட்டுக்குப் போனது. பரூர் தொகுதியில் போட்டியிட்ட ஏ.சி. ஜோஸ் என்பவர்தான், இந்த வழக்கைப் போட்டார். எல்லா மட்டத்திலும் இந்த மாடலின் நம்பகத்தன்மை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் மெஷினைப் பற்றிக் குறை சொல்லாவிட்டாலும், 'தேர்தல் சட்டங்கள் இதற்கு (மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த) அனுமதிக்க வில்லை' என்று உச்சநீதி மன்றம் தடை விதித்தது.
அடுத்து, படிப்படியாக புதுப்புதுத் தடைகள். பல கட்டங்களில், பலமட்டத்திலிருந்து வந்த எல்லா சேலன்ஜ்-ஐயும் தாண்டிப் போராட வேண்டியிருந்தது. கடைசியில் 1989 மார்ச்சில் 'மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்' என்று அரசியல் சட்டத்திருத்தம் வந்தது. அதன்பிறகு, தற்போது பயன்படுத்தப்பட உள்ள அடுத்த மாடல், கூடுதல் அம்சங்களுடன் தயாரானது. மார்ச் 1990-ல், குற்றம் சொல்லமுடியாத இந்த மாடலில், 1.50 லட்சம் மெஷின்கள் தயாரிக்கப்பட்டு ரெடியானது. பெங்களூரில் உள்ள 'பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' என்ற பொதுத்துறை நிறுவனம் இதைத் தயாரித்து முடித்தது. [தமிழ் வாசகர்கள் பலருக்கு எழுத்தாளராக அறிமுகமான சுஜாதா, (நிஜப்பெயர்- ரங்கராஜன்) இந்த இயந்திரத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.] 8.50 கோடி ரூபாய் செலவில், நவீன இயந்திரங்களை நிறுவி தயாரான மின்னணு வாக்குப் பதிவு யந்திரத்தின் பயணம், இதன் பிறகும் எளிதாகி விடவில்லை.
1989-ன் இறுதியில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, வி.பி.சிங் இந்த மெஷினைக் குறை சொன்னார். தேவையானவர்களுக்கு சாதமாகச் செயல்படும்படி, இந்த மெஷினின் புரோகிராமை வடிவமைக்க முடியும் என்று சாதித்தார். இதற்கு ஆதாரமாக சாதாரண கம்ப்யூட்டரில் புரோகிராம்களை மாற்றி எழுதி, முடிவுகளைக் காட்டி பூகம்பத்தைக் கிளப்பினார். ஆனால் இந்த வாக்குப் பதிவு இயந்திரத்தின் புரோகிராம்கள்-யார் வேட்பாளர், அவர் எந்தக் கட்சி என்ற எந்தத் தகவலும் இல்லாத நிலையில், (அடிப்படை புரோகிராமையே ஒரு மைக்ரோ சிப்புக்குள் வைத்து சீல் செய்து, அந்த சிப்புகளையும் தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தியே) தயாரிக்கப்பட்டிருந்தன. சிங், எழுப்பிய பிரச்னையால், தயாரான மெஷின்கள் எல்லாம் தேர்தல் கமிஷனின் அறை ஒன்றில் தூங்கிக் கொண்டேயிருந்தன. அப்போதைய தேர்தல் முடிவுகளின்படி வி.பி.சிங்கே பிரதமராகப் பதவி ஏற்றார். மனுஷன், பதவி ஏற்றவுடனேயே, தினேஷ் கோஸ்வாமி என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தார். எல்லாக் கட்சியிலிருந்தும் உறுப்பினர்கள் கொண்ட அந்தக் கமிட்டியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்திரேசன், ராவ் காசரபாடா மற்றும் சம்பத் போன்றவர்களும் இடம் பெற்றனர். இத்துடன் முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.எல்.சக்தர், செயலர் கணேசன் என ஒரு மாபெரும் படையே இறங்கி, எல்லா அம்சங்களையும் அக்கு வேறு ஆணி வேறாய் அலசியது. இறுதியில் 'இந்த மெஷினை, எந்த ரீதியிலும் தவறாகப் பயன்படுத்த முடியாது. இதனால் அடுத்து வரும் தேர்தல்களில் இதை பயன்படுத்த வேண்டும்' என்று அறிக்கையைக் கொடுத்தது படை. ஆனாலும் விஷயம் அத்தோடு முடியவில்லை.
எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் தேர்தலில் இடம் பிடித்து விட்டால், தற்போது பயன்படும் 'வாக்குப் பெட்டிகள்' செய்பவர்களிலிருந்து, இன்னும் பலருக்கு வேலை காலியாகும்; பிழைப்பில் மண் விழும். இவர்களெல்லாம் சேர்ந்து அரசியல்வாதிகளை அணைத்துக் கொள்ள, மறைமுகத் தடைக் கற்கள். பைல்கள், பரண் ஏறிப்படுத்தன. தயாரான மெஷின்கள் அனைத்தும், கும்பகர்ணத் தூக்கத்தில் முழ்கின.
ஒட்டுமொத்தமாக, எல்லாக் கட்சியின் அரசியல்வாதிகளுக்கும், ஏன் பல அதிகாரிகளுக்கும் கூட சிம்ம சொப்பனமாக இருந்து வயிற்றில் புளியைக் கரைத்த, முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.என். சேஷன் கூட, இந்த விஷயத்தில் துணிந்து முடிவெடுக்க முடியவில்லை. பல விஷயங்களை, தேர்தல் சீர்திருத்தங்களை முன்னுக்குத் தள்ளிய அவர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை மட்டும், தனது அஜெண்டாவில் பின்னுக்குத் தள்ளிவிட்டார். இன்றைய தேர்தல்கமிஷன்தான் துணிந்து முடிவு எடுத்து, நேர்மையான தேர்தலுக்குப் பயன்படும் -'மெஷின்'களின் தூக்கத்தை கலைத்துள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படும் விதம்:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று-பேலட் பாக்ஸ் எனப்படும் வாக்குப் பதிவு செய்யும் பகுதி. இதில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களது சின்னம் இடம் பெற்றிருக்கும். அவற்றுக்கு எதிரில், ஓட்டுப் போட அழுத்த வேண்டிய பட்டன் இருக்கும். ஓட்டுப் பதிவாகி விட்டதைக் காட்ட, சிவப்பு விளக்கு ஒன்று எரியும் வகையில் இதில் ஏற்பாடுகள் உள்ளன. மற்றொருபகுதி, பதிவான வாக்குகளைக் கணக்கிட்டுக் கொள்ளும் கண்ட்ரோல் யூனிட். பேலட் பாக்ஸும், கண்ட்ரோல் யூனிட்டும், மிக நீண்ட கேபிளால் இணைக்கப்பட்டிருக்கும். கண்ட்ரால் யூனிட், தேர்தல் நடத்தும் அதிகாரியின் மேஜை மீது இருக்க, பேலட் பாக்ஸ் மறைவான இடத்தில் வைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடத்தப்படும். கண்ட்ரோல் யூனிட்டில் 'பேலட்' (Ballot) என்றொரு பட்டன் உள்ளது. இதை தேர்தல் அதிகாரி அழுத்திய பின்னரே, வாக்குப் பதிவு செய்ய முடியும். இது அழுத்தப்பட்டு, வாக்காளர் தனது வாக்கைப் பதிவு செய்யலாம் என்பதை, பேலட் பாக்ஸின் மேல் புறத்தில் உள்ள இன்னொரு சிவப்பு விளக்கு எரிந்து, தகவல் சொல்லும். அதன் பின் வாக்காளர் தான் விரும்பிய வேட்பாளரின் பெயருக்கு எதிரில் உள்ள பட்டனை அழுத்தலாம். உடனே, கண்ட்ரோல் யூனிட்டுக்குத் தகவல் சென்று, சம்மந்தப்பட்ட வேட்பாளர் கணக்கில் வாக்கு பதிவாகி விடும். வாக்கு பதிவாகி விட்டதை 'பிப்' என்ற ஒலியும்,வேட்பாளர் பெயருக்கு எதிரில் உள்ள சிவப்பு விளக்கு கண் சிமிட்டியும் தகவல் சொல்லும். இதன் பிறகு அடுத்த வாக்காளர் வாக்குப் பதிவு செய்ய, தேர்தல் அதிகாரி மீண்டும் கண்ட்ரோல் யூனிட்டின் 'பேலட்' பட்டனை அழுத்த வேண்டும். இதற்கு முன்பு வேறு யாரும் வாக்குப் பதிவு செய்ய முடியாது. எத்தனை முறை பேலட் பாக்ஸின், எந்த பட்டனை அழுத்தினாலும் பலன் இருக்காது. இத்துடன் நமது தேர்தல் முறையின் படி ஒரு நிமிடத்தில் அதிகப் பட்சம் 5 முதல் 6 வாக்குகள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதால், அவ்வாறே இந்த இயந்திரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை விட வேகமான வாக்குப் பதிவுக்கு இயந்திரம் இடம் தராது. இதனால் வாக்குச் சாவடியைக் கைப்பற்றி, ஒரு வேட்பாளருக்கே இஷ்டப்படி ஓட்டுப் போடும் மோசடியைத் தவிர்க்க முடியும். தேவைப்பட்டால் நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குப் பதிவான விதத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து, சரிபார்க்கவும் ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகை இயந்திரம் ஒன்றில் அதிகப் பட்சமாக 3840 வாக்குகளைப் பதிவு செய்யலாம். அதனால் சராசரியாக ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரு இயந்திரம் போதுமானது. தேவைப்பட்டால் இரண்டாவது இயந்திரத்தையும் பயன்படுத்த முடியும். சின்னச் சாவடிகளில், இரண்டு சாவடியின் ஓட்டையும், ஓரே இயந்திரத்தில் பதிவு செய்யவும் வாய்ப்பு உண்டு.
பேலட் பாக்ஸ் ஒன்றில், 16 வேட்பாளர்கள் பெயர் இடம் பெறும் (படத்தில் காணலாம்). இதுபோல 4 பேலட் பாக்ஸ்களை, ஒரே கண்ட்ரோல் யூனிட்டுடன் இணைத்து தேர்தல் நடத்தலாம். இதனால் இந்த வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் அதிக பட்சமாக 64 வேட்பாளர் வரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க முடியும். குறைவான வேட்பாளர்கள் இருந்தாலும், அதற்கு ஏற்ப இதைத் திருத்தி அமைத்துக் கொள்ளலாம். (அதுவும் படத்தில் காட்டப்பட்டுள்ளது).
ஒரு வாக்குச் சாவடியில் தேர்தல் நடந்து முடிந்தவுடன், கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள 'Close` என்ற பட்டனை அழுத்திவிட்டால், கன்ட்ரோல் யூனிட் பூட்டிக் கொள்ளும். இதன் பிறகு என்ன செய்தாலும் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாது.
தேர்தல் முடிவுகளை அறிய கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள 'Result` என்ற பட்டனை அழுத்த வேண்டும். பதிவான மொத்த வாக்குகள், ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் என வரிசையாக கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள டிஸ்பிளேப் பகுதியில் பார்க்க முடியும்.
இது மட்டுமின்றி, இரண்டு தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தவும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். அதாவது சட்டமன்றம், பாராளுமன்றம் இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தாலும், இதைப் பயன்படுத்தலாம். இரண்டுக்குமான முடிவுகளை அறிய, தனித்தனியான 'ரிசல்ட்' பட்டன்கள் இதில் உள்ளன.
இது மட்டுமின்றி சாதாரணமாக தற்போது நடக்கும் தேர்தலில் செல்லாத ஓட்டுகள் என்று பதிவாவதும் இதில் சாத்தியமே இல்லை. வாக்குப் பதிவு செய்யும் நபர், தான் விரும்பிய வேட்பாளர் பெயருக்கு எதிரில் உள்ள பட்டனைத் தொட்டவுடனே வாக்குப் பதிவாகி, இணைப்புதுண்டிக்கப்படுவதால், அதன் பிறகு தவறுதலாக வேறு பட்டனில் விரல் பட்டாலும் பாதிப்பு இருக்காது.
இது மட்டுமின்றி தேர்தல் முடிவுகளை அறிய நாள் கணக்கில் காத்திருப்பது, 'ஓட்டுகளை மாற்றிப் போட்டு எண்ணிவிட்டார்கள்' என மறு எண்ணிக்கை, பெரிய தொகுதிகளில் ஒட்டுகளை எண்ண ஏராளமானவர்களைப் பணியில் அமர்த்திப் பராமரிப்பது, போன்ற எந்த சிரமங்களும் இதில் இல்லை. பட்டனைத் தட்டி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
கூடுதல் பலன்கள்:
ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தை, குறைந்த பட்சம் 10 ஆண்டுகளும், அதிக பட்சம் 20 ஆண்டுகள் வரையிலும் பயன்படுத்த முடியும். இதனால் குறைந்தது 2 தேர்தலுக்கும், அதிகபட்சம் 4 தேர்தலுக்கும் இதைப் பயன்படுத்தலாம். (இப்போதுள்ள சூழ்நிலை போல, அடிக்கடி பொதுத் தேர்தல்கள் நடந்தால், இந்த எண்ணிக்கை கூடலாம். அதற்கேற்ப அரசின் செலவும் ஏகத்துக்குக் குறையும்!)
தேர்தலுக்கான பிரசார காலத்தையும் கணிசமாகக் குறைக்கலாம். வாக்குச் சீட்டு அச்சிடுவது போன்ற காரணங்களுக்காக தற்போது 15 நாட்கள் வரை தேவைப்படுகிறது. இது குறைக்கப்பட்டால் வேட்பாளர்களுக்கு ஆகும் பிரசார காலத்துச் செலவுகளும் கணிசமாகக் குறையும்.
செலவு கணக்குகள் எப்படி?
தற்போது தயாராகிக் காத்திருக்கும் 1.50 லட்சம் இயந்திரங்களைத் தயாரிக்க - ஒன்றுக்கு 7000 ரூபாய் வரை செலவாகியுள்ளது. இத்துடன் கன்ட்ரோல் யூனிட்டை இயக்கத் தேவைப்படும் ஸ்பெஷல் பேட்டரி ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை. (இது 1990-ன் கணக்கு) இப்படிப்பல விதங்களில் பயன்தரும், சிக்கனமான தேர்தல் முறைக்கு வழி செய்வதால் தான், எல்லாஎதிர்ப்புகளையும் மீறி இந்த 'மெஷின்' இடைக்கால வெற்றியைப் பெற்றுள்ளது. முழு ஜனநாயகத்தை வரவேற்க விரும்பும் அனைவரும், இந்த வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்பது ஆச்சரியமில்லை தானே! (23-5-1999 / www.ambalam.com)
5 கருத்துகள்:
நன்றி. இருந்தாலும் நடுவில் வந்த ஜிலேபி எழுத்துக்களைப் படிக்க சுரதாவின் பெட்டிக்குச் செல்ல வேண்டியிருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோ ண்டு ராகவன்,
Feedbackக்கு நன்றி!
- சந்திரன்
ஆமாம் சந்திரன் நடுவில் இருப்பதை சரியாக படிக்க முடிய வில்லை
நன்றி சார்... அப்படியே உங்களின் வாக்குப் பெட்டியை சரி பார்க்கவும்.
இங்கு சுட்டி http://www.thamizmanam.com/tamilblogs/rating_demo_start.htm
பார்க்கலாம்.
அல்லது, இங்கும் http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?t=32 பார்க்கலாம்
நன்றி... தற்பொழுது முழுமையாக படிக்க முடிகிறது
கருத்துரையிடுக