மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, டிசம்பர் 26, 2025

இடைக்கால வரலாற்றின் சில காட்சிகள்!… - சுந்தரபுத்தன் நாவல் “பெரியவன்” விமர்சனம்
பத்திரிகையாளரும், எனது நண்பருமான சுந்தரபுத்தன் எழுதிய முதல் நாவல் - "பெரியவன்". நீண்ட நாட்களுக்குப் பின்... கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்... அவரை நேரில் சந்தித்தபோது இந்த நாவல் எழுதியிருப்பதைப் பற்றிச் சொன்னார். அப்போதே விலை கொடுத்து, அனுப்பி வைக்கச் சொன்னேன். இந்த நாவல் கடந்த டிசம்பரில் வெளியாகியுள்ளது. அவ்வகையில் மிக தாமதமான புத்தக விமர்சனம் இது; அல்லது, இந்த நாவல் பற்றிய எனது புரிதல். நேற்று அந்த நாவலை முழுமையாகப் படித்து முடித்தேன். இந்த நாவலின் உள்ளடக்கம் முற்றிலும் கற்பனையல்ல. சுந்தரபுத்தனின் தந்தை ஒளிச்செங்கோ (நடராஜன்) அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை அங்கங்கே படம் பிடித்தது போன்ற நிகழ்வுகளின் தொகுப்பாக நீள்கிறது. அந்த வகையில், அவரது தந்தையின் வாழ்க்கைச் சரிதம். சுந்தரபுத்தனின் தாத்தா அந்நாளில் ஒரு பண்ணையாரிடம் சமையல்காரராக இருந்து சுவையான உணவு வழங்கி வந்தவர் என்றும், அதனால், அந்த பண்ணைவீட்டு அந்நாளையத் தொடர்பில், இந்நாளில் ஒரு சிறுவனாக அந்த பண்ணை வீட்டுக்கு தனது பாட்டியுடன் சென்று வருவதாக ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து [சுந்தரபுத்தனின்(!)] இருந்து தொடங்குகிறது நாவல். சுந்தரபுத்தனை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம், அவர் செயற்கை தவிர்த்த கிராமத்து சூழலின்.... இயற்கைக் காட்சிகளின் ரசிகன் மட்டுமல்ல; காதலன் என்பது. அது இந்த நாவலின் பல்வேறு பக்கங்களில் அங்கங்கே கொட்டிக் கிடைப்பதை மீண்டும் உணர முடிகிறது. குடும்பத்தில் மூத்த மகன் என்பதால், தாயால் 'பெரியவன்' என்று சொல்லப்படும், நடைமுறை பட்டப்பெயர்தான் இந்த நாவலுக்கும் சூட்டப்பட்டுள்ளது. அதோடு நாவல் முழுக்க பரவிக் கிடக்கும் இன்னொரு விஷயம் ஒரு முழுநேர பத்திரிகையாளராக, ஒரு நிறுவனத்துடன் இணைந்து இல்லாமல், அந்நாளில் இருந்த ஒரே ஊடகமான செய்தி பத்திரிகைக்கு பணியாற்றுவதில் உள்ள சவால்கள்... சிரமங்களை 'பெரியவன்' நடராஜன் அவர்களின் அனுபவமாக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் சுந்தரபுத்தன். இந்த நேரத்தில் எனது சொந்த அனுபவம் ஒன்றும் நினைவில் வருகிறது. நான் பொறியியல் பட்டம் பெற்று சில காலம் ஆசிரியப் பணியிலும் இருந்தபின், பத்திரிகை துறைக்கு செல்ல விரும்புவதாக கூறியபோது, 'என்ன வேலை?' என்ற என் தந்தையிடம் "நிருபராக" என்று சொன்னேன். அவருக்கு வந்ததே கோபம். ஒரு அரசு அலுவலகத்தில்... மாவட்டத் தலைநகர் கூட இல்லாத சிறு நகரம் ஒன்றில் மட்டுமே வாழ்ந்து பணியாற்றிய அவருக்கு 'நிருபர்' என்றவுடன், மனதில் என்ன மாதிரி பிம்பம் உருவாகியிருக்கும் என்பதை, இந்த நாவலில் நடராஜன் அவர்கள் படும்பாட்டில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த நாவலின்படி, கதாநாயகன் நடராஜன் அவர்களுக்கு பல வேடங்கள். 'அவ்வைசண்முகி கமல்' மாதிரி! ஒருநேரத்தில், பத்திரிகையாளராக... ஒருவேளையில், விவசாயியாக, இன்னொரு கணத்தில், குடும்பத்தின் மூத்த மகனாக - தம்பிகள், தாய் உள்ளிட்டவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்புள்ளவனாக... மற்றொரு வேளையில் திராவிடர் கழக அனுதாபியாக.... என மாறி மாறி காட்சி தருகிறார். தந்தைப் பெரியாரின் தொடர் பயணங்கள், பிரச்சாரங்கள், மேடைப் பேச்சுகள் என்று சில வரி செய்திகளாக மட்டுமே அங்கங்கே படித்து அறிந்திருந்து என் தலைமுறை. அதன் சாமானியர்களுக்கு, அந்நாளைய யதார்த்தங்கள் பற்றி அதிகம் எட்டாத பல விஷயங்கள் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளன. பெரியார் நடத்திய பயிற்சி வகுப்புகளில் ஒரு பங்கேற்பாளராக நடராஜன் கலந்து கொண்டதை காட்சிப்படுத்தும்போது நாம் உணர்வது - ஒரு திராவிடர் கழகப் பற்றாளர் பற்றி மட்டுமல்ல. இது அந்த கட்சி எப்படியெல்லாம் வளர்க்கப்பட்டது என்பதற்கான ஒரு வரலாற்று பதிவு என்றும் உணர்கிறேன். மேலும், தாய் கழகத்தில் இருந்து பிரிந்துவிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த நாட்கள் முதல் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலம் வரையான நடப்புகளில் 'பெரியவன்' அனுபவமாக சுந்தரபுத்தனின் பார்வை இந்த நாவலில் அறங்கேறியுள்ளது. இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ள பல நடப்புகளை காட்சிப்படுத்தும்விதமாக அங்கெங்கே இடம் பெற்றுள்ள ஓவியர் மனோகரின் கோட்டோவியங்கள் அருமை. பின்னட்டையை அலங்கரிக்கும் தனராஜூ சுவாமிநாதனின் படைப்பும், இந்த நாவலுக்கும், புத்தகத்துக்கும் உயிரூட்டுகின்றன. இதையெல்லாம் தாண்டி, நாவலை முடித்தபோது தோன்றிய ஒரு எண்ணத்தைச் சொல்லாமல் விட்டால், அது நடுநிலை தவறிய விமர்சனம் என உணர்கிறேன். ஆங்கில நூல்கள் பலவற்றில் கவனித்திருக்கிறேன். அது நாவலோ, வேறு உரைநடையோ... எதுவாக இருந்தாலும், அதன் எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்பவர் ஒருபுறமிருக்க... அதன்பின் Editor என்ற பெயரில், ஒருவர் அந்நூல் வெளியாகும் முன் அதில் இயங்குவது உண்டு. அதன்மூலம், படைப்பின் உள்ளடக்கத்தை இன்னும் செறிவாக்குவார் என்று சொல்லப்படுகிறது. இந்த Editor பணி செய்வோர் பொதுவாக பறந்துபட்ட நூல் அறிவும், உலக அறிவும் கொண்டவர்களாக இருப்பார்களாம். அதனால், ஒரு திரைப்படத்தில் எடிட்டர் செய்யும் வேலையை இவர்கள் எழுத்தில் செய்வார்கள் என்பது பிரபல, தேர்ந்த, ஆங்கில பதிப்புமுறை. ஆனால், அத்தகைய நடைமுறை, நான் அறிந்த வரை தமிழில் அரிதானது. முக்கியமாக படைப்பு இலக்கியத்தில் - மூச்.... நமது படைப்பாளிகள், அடுத்தவர் தனது படைப்பில் கை வைப்பதை விரும்பவே மாட்டார்கள். இந்த நிலை மாறுமா.... மாற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நான் அறிந்த வரையில் சுந்தரபுத்தன், தமிழ் சூழலில் நிறைந்துள்ளதாகக் கருதப்படும் ஒரு சராசரி தமிழ் படைப்பாளியின் Ego கொண்டவரல்ல. இது எனது மதிப்பீடு. அதனால், ஒருவேளை 'பெரியவ'னுக்கு மேலே சொன்னது போன்றதொரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்த நாவல் இன்னும் மேம்பட்டிருக்கும் என்பதோடு, தமிழ் படைப்புலகில் ஒரு புதிய தொடக்கமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். தமிழ்வெளி பதிப்பாக வந்துள்ள 200+ பக்கங்கள் கொண்ட இந்த நாவல், சுதந்திரப் போராட்ட காலத்திற்கு பின்னுள்ள இடைக்கால தமிழக வரலாற்றின் சில யதார்த்தங்களை காட்சிப்படுத்துகிறது என்பதில் மட்டும் சந்தேகமில்லை. சுந்தரபுத்தனின் அடுத்த நாவலுக்காக காத்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: